Latest News

கொடுங்கையூரில் கேஸ் சிலிண்டர் வெடித்து 5 பேர் காயம்: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

கேஸ் சிலிண்டர் வெடித்ததில் காயமைடைந்த வெங்கட பிரகாஷ் குடும்பத்தினர். 

சென்னை கொடுங்கையூரில் அதிகாலையில் வீட்டில் கசிந்திருந்த கேஸை கவனிக்காமல் லைட் சுவிட்சை போட்டதால் வீடு முழுதும் தீப்பற்றி வெடித்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் பக்கத்து வீட்டுப் பெண்ணும் படுகாயத்துடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 175-வது தெருவில் வசிப்பவர் வெங்கட பிரகாஷ் (54)ரயில்வே ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கீதா (44). இவர்களுக்கு சர்மிளா (23) என்ற மகளும் கிஷோர்(20) என்ற மகனும் உள்ளனர். நேற்றிரவு வழக்கம் போல் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு குடும்பத்தினர் அனைவரும் உறங்கச் சென்றனர்.

வீட்டில் சமையலுக்கு பயன்படும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரில் நள்ளிரவிலிருந்து கேஸ் கசிய ஆரம்பித்துள்ளது. கேஸ் கசிந்து வீடு முழுதும் பரவி இருந்தது. பிரகாஷ் இன்று காலை வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதால் அதிகாலை 4.30 மணிக்கு எழுந்துள்ளார். வீட்டில் கேஸ் கசியும் வாசனையை உணர்ந்த அவர், அந்த நேரத்தில் சின்ன தீப்பொறி கூட பெரும் தீவிபத்தை ஏற்படுத்தும் என்பதை அறியாமல் உடனடியாக விளக்கை எரிய வைக்க சுவிட்சைப் போட்டுள்ளார்.

அப்போது சுவிட்சிலிருந்து கிளம்பிய சிறு தீப்பொறி அறை முழுதும் பரவியிருந்த கேஸுடன் கலக்க பலத்த சத்தத்துடன் தீப்பிடித்தது. பிரகாஷ் தூக்கி எறியப்பட்டார். வீடு முழுவதும் தீ பரவியதில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மற்றவர்களும் தீயில் கருகினர். பிரகாஷின், மனைவி, மகள் மற்றும் மகன் அனைவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

பலத்த சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது போல் வெடித்ததில் வீட்டின் கதவு வீசியெறியப்பட்டது. இதில் பக்கத்து வீட்டில் வசிக்கும் மும்தாஜ் என்ற பெண் காயமடைந்தார். அனைவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு, தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினா் வந்து நால்வரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வீட்டில் எரிந்த தீயையும் அணைத்தனர்.

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பிரகாஷ் குடும்பத்தினர் அனைவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். காயமடைந்த மும்தாஜும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து கொடுங்கையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.