எம்.பி.பதவியை ராஜினாமா செய்த மாயாவதிக்கு ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர்
லாலு பிரசாத் யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இன்றைய
கூட்டத்தொடரின் போது, ராஜ்யசபாவில் தலித்துகள் மீதான தாக்குதல்களை
பட்டியலிட்டு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பேச தொடங்கினார். ஆனால்
அவருக்கு மூன்று நிமிடம் நேரம் ஒதுக்குவதாக துணை சபாநாயகர் பி.ஜே. குரியன்
தெரிவித்தார்.
தலித் இன மக்கள் மீதான தாக்குதல் மற்றும் அடக்குமுறைகள் குறித்து
தெரிவித்த அவர் 3 நிமிடத்தைத் தாண்டி பேசினார். அப்போது துணை சபாநாயகர்
பி.ஜே.குரியன், உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டது என
சுட்டிக் காட்டினார்.
இதனால், ஆவேசம் அடைந்த மாயாவதி, ராஜ்யசபாவில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ராஜ்யசபாவில் தலித்துகள் மீதான
தாக்குதல்கள் குறித்து பேச அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் ராஜ்யசபா எம்பி
பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன் என அதிரடியாக அறிவித்தார்.
அதன்படி தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் மாயாவதி.
இந்நிலையில் எம்.பி.பதவியை ராஜினாமா செய்த மாயாவதிக்கு ராஷ்ட்ரிய ஜனதா தள
தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் மாயாவதி
விரும்பினால் மீண்டும் அவரை ராஜ்யசபா உறுப்பினர் ஆக்குவோம் எனவும் அவர்
தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment