திருமணமான 8 நாட்களில், போஸ்ட் கார்டு மூலமாக மனைவிக்கு தலாக்
அனுப்பிய கணவருக்கு எதிராக மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை அடுத்து தலாக் அனுப்பிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
ஹைதராபாத்தில் உள்ள குகட்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது ஹனீப்(38).
அதே பகுதியில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணிபுரிந்து
வருகிறார். இவருக்கும் தலப்கட்டா பகுதியை சேர்ந்த 26 வயது பெண்
ஒருவருக்கும் கடந்த மார்ச் 9-ம் தேதி திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு அடுத்தநாள் வீட்டைவிட்டு வெளியேறிய ஹனீப்,
சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு செல்வதால் சில நாட்கள் வீட்டிற்கு
வரமாட்டேன் என மனைவிக்கு தகவல் கொடுத்திருக்கிறார். இதையடுத்து சில நாட்கள்
வீட்டிற்கு வராமலே இருந்தார்.
இந்நிலையில் மார்ச் 16-ம் தேதி தனது மனைவியின் வீட்டு முகவரிக்கு
போஸ்ட்கார்டில் ஹனீப் மூன்று முறை தலாக் என எழுதி அனுப்பியுள்ளார். இரண்டு
பேர் சாட்சியாக தான் தலாக் செய்வதாகவும் அந்த போஸ்ட்கார்டில் அவர்
தெரிவித்துள்ளார்.
மேலும், தனது மனைவிக்கு போன் மூலமும் தலாக் குறித்து தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஹனீப்பின் மனைவி தனது பெற்றோருடன் சென்று,
தலப்கட்டா காவல் நிலையத்தில் ஹனீப்பிற்கு எதிராக புகார் கொடுத்தார்.
புகாரைத் தொடர்ந்து ஹனீப்பிற்கு எதிராக 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
செய்து அவரை கைது செய்துள்ளனர்.
No comments:
Post a Comment