அ.தி.மு.க.வில் உள்ள உண்மையான தொண்டர்கள், நிர்வாகிகள் ஓ.பன்னீர்
செல்வம் பக்கம் தான் உள்ளனர் என்றும் சசிகலாவை கட்சியில் இருந்து ஓடஓட
விரட்டுவோம் என்றும் முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் கூறியுள்ளார்.
அதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள முன்னாள் முதல்வர்
ஓ.பன்னீர் செல்வம், மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து ஆலோ சனை நடத்தி
வருகிறார். அந்த வகையில் இன்று நாமக்கல், ஈரோடு மாவட்ட நிர்வாகிகளுடன்
ஆலோசனை நடந்தது.
இதில் ஓ.பன்னீர்செல்வம், அவைத் தலைவர் மதுசூதனன், முன்னாள்
அமைச்சர்கள் சி.பொன்னையன், கே.பி.முனுசாமி, பாண்டிய ராஜன், நத்தம்
விசுவநாதன், செம்மலை, எம்.பி.க்கள் மைத்ரேயன், பி.ஆர்.சுந்தரம்,
அசோக்குமார், சத்யபாமா, முன்னாள் எம்.பி.மனோஜ் பாண்டியன் உள்பட ஏராளமானோர்
கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய மனோஜ் பாண்டியன், சசிகலாவால் தான் அதிமுகவுக்கு பின்னடைவு
ஏற்பட்டுள்ளது. சசிகலாவுக்கு முதன்முதலில் எதிர்ப்பு குரல் கிளம்பியது
கொங்கு மண்டலத்தில் தான். நாளுக்கு நாள் சசிகலாவுக்கு எதிர்ப்பு குரல்
அதிகமாகி கொண்டே வருகிறது. எனவே சசிகலாவை கட்சியில் இருந்து ஓடஓட
விரட்டுவோம். அ.தி.மு.க.வில் உள்ள துரோகிகளும் ஓரம் கட்டப்படுவார்கள்.
டி.டி.வி. தினகரன் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். அவர்
இன்று துணை பொதுச்செயலாளர் என்று சொல்லிக் கொள்கிறார். இவர் மீதும்
வழக்குகள் உள்ளதால் விரைவில் அவர் ஜெயிலுக்கு செல்வார்.
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை விலக்கும் வகையில் நீதி விசாரணை கோரி
நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டம் வெற்றி அடையும். தமிழகத்தில்
ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும். இவ்வாறு அவர்
பேசினார்.


No comments:
Post a Comment