Latest News

மணிப்பூரில் பாஜக ஆட்சி அமைகிறது.. முதல்வராக பிரேன் சிங் தேர்வு

 
மணிப்பூரில் ஆட்சியமைக்க போதிய பலமில்லாத போதிலும் பிற கட்சிகளின் ஆதரவுடன் அங்கு பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. முதல்வராக பிரேன் சிங் தேர்வு செய்யப்படுள்ளார் என அக்கட்சி அறிவித்துள்ளது. நடந்து முடிந்த 5 மாநில சட்டசபைத் தேர்தலில் உ.பி மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

கோவா மற்றும் மணிப்பூரில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் ஆட்சியமைக்க 31 இடங்களை கைப்பற்றியாக வேண்டும். காங்கிரஸ் 28 இடங்களில் வெற்றி பெற்றது. 21 இடங்களை கைப்பற்றி பாஜக 2 வது இடத்தில் இருந்தது. நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 4 இடங்களும், லோக் ஜனசக்தி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் கிடைத்தன. ஒரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார். இதனிடையே பாஜக தனக்கு 32 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது என கூறி ஆளுநர் நஜ்மா கெப்துல்லாவிடம் ஆட்சியமைக்க உரிமை கூறியுள்ளது. தங்களுக்கு தேசிய மக்கள் கட்சி உட்பட 32 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக பாஜக கூறியுள்ளது. இதையடுத்து அடுத்த ஆட்சி தொடங்கும் வகையில் மணிப்பூர் மாநில ஆளுநர் நஜ்மா கெப்துல்லா இப்போதைய முதல்வர் இபோபி சிங்கை பதவியை ராஜினாமா செய்ய கேட்டுக் கொண்டு உள்ளார். இதனைத் தொடர்ந்து இபோபி சிங் 24 மணிநேரத்தில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறியுள்ளார். இந்நிலையில் இன்று பிற்பகல் பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. மேலிட பார்வையாளராக மத்திய அமைச்சர்கள் பியுஷ் கோயல், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பிரேன் சிங், சட்டமன்ற கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து விரைவில் அவர் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர இருக்கிறார். இதையடுத்து வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பாஜக ஆட்சி அமைகிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.