Latest News

நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்.எல்.ஏ. ஆறுமுகம் பங்கேற்றாரா? வெடிக்கும் புதிய சர்ச்சை


எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பில் கந்தர்வகோட்டை அதிமுக எம்.எல்.ஏ. ஆறுமுகம் பங்கேற்றாரா? என புதிய சர்ச்சை வெடித்துள்ளது. இது தொடர்பாக ஆளுநர் வித்யாசாகர் ராவின் கவனத்துக்கும் திமுக கொண்டு சென்றுள்ளது.

சட்டசபையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். ஓபிஎஸ் அணிக்கு 11 எம்.எல்.ஏக்கள் ஆதரவுதான் கிடைத்தது.

குமாரசாமி கணக்கா?
திமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றப்பட்டனர். காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்தது. தற்போது அதிமுகவுக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு என்பதே 'குமாரசாமி' கணக்கு என ஒரு சர்ச்சை வெடித்துள்ளது.

ஆறுமுகம் எம்.எல்.ஏ.
கந்தர்வகோட்டை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ஆறுமுகம் நீண்ட நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம். அவர் தொடர்ந்தும் மருத்துவமனையில் உள்ள நிலையில் அவர் சட்டசபைக்கு வந்திருக்க வாய்ப்பில்லை.

பதில் வரவில்லை.. 
அப்படியான நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவு 121 ஆகத்தானே இருக்க முடியும்; அதெப்படி 122 ஆக இருக்கும்? என ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. இந்த சர்ச்சை காலை முதல் சமூக வலைதளங்களில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. இதுவரை கந்தர்வகோட்டை ஆறுமுகம் தரப்பில் எந்த பதிலும் வரவில்லை.

ஆளுநரிடம் புகார் இதனிடையே கந்தர்வகோட்டை ஆறுமுகம் விவகாரம் குறித்து ஆளுநரின் பார்வைக்கு திமுக கொண்டு சென்றுள்ளது. இது தொடர்பாக தாமும் விசாரிப்பதாகவும் உங்களுக்கு கூடுதல் தகவல் கிடைத்தால் தம்மிடம் பகிர்ந்து கொள்ளுமாறும் திமுக தரப்பிடம் ஆளுநர் கூறியுள்ளாராம்.





No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.