Latest News

  

அமெரிக்க விமான நிலையத்தில் குத்துசண்டை வீரர் முகமது அலி மகனிடம் 'நீ முஸ்லிமா' ?? என தொந்தரவு செய்து 2மணி நேரம் விசாரணை நடத்தினர்!!!

அமெரிக்காவின் புளோரிடா விமான நிலையத்தில், பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் மகனை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், 2 மணி நேரம் துருவித்துருவி விசாரணை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குத்துச் சண்டை உலகின் முடிசூடா மன்னராக விளங்கியவர் முகமது அலி. 3 முறை உலக ஹெவி வெயிட் சாம்பியன் பட்டத்தை வென்று ஜாம்பவானாக திகழ்ந்தார். கடந்த ஆண்டு ஜூன் 3ம் தேதி உடல் நலக்குறைவால் முகமது அலி காலமானார். இந்நிலையில், அமெரிக்க விமான நிலையங்களில், முஸ்லிம்களிடம் காட்டப்படும் வழக்கமான கெடுபிடியில், முகமது அலி குடும்பத்தினரும் சிக்கிய சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முகமது அலியின் 2வது மனைவி கலிலா கமாச்சோ அலி. இவர்களுக்கு முகமது அலி ஜூனியர் (44) என்ற மகன் உள்ளார். அமெரிக்காவின் பிலடெல்பியா பகுதியில் பிறந்த இவர், அந்நாட்டு குடியுரிமை பெற்றவர். கடந்த 7ம் தேதி, கலிலா கமாச்சோ அலி, மகன் முகமது அலி ஜூனியர் இருவரும் புளோரிடா விமான நிலையத்துக்கு வந்தனர். அப்போது, இருவர் பெயரிலும் ‘அலி’ இருப்பதால் அவர்களை விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். முகமது அலியுடன் இருப்பது போன்ற போட்டோவை காட்டியதால் அவரது மனைவி கலிலாவை அதிகாரிகள் விடுவித்தனர்.

அப்படிப்பட்ட போட்டோ ஏதும் இல்லாததால், மகன் முகமது அலி ஜூனியரிடம் துருவித்துருவி விசாரணை மேற்கொண்டுள்ளனர். ‘எங்கிருந்து இந்த பெயரை வைத்துக் கொண்டாய்’, ‘நீ முஸ்லிமா’ என கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். ‘நானும் என் தந்தை போல முஸ்லிம்தான்’ என முகமது அலியின் மகன் கூறியதும், 2 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்திய பிறகு அதிகாரிகள் விடுவித்துள்ளனர். இத்தகவலை அவர்களின் குடும்ப வக்கீல் மன்சினி வெளியிட்டுள்ளார். ‘‘விளையாட்டை தாண்டி, மனித உரிமைகளுக்காக போராடியவர் முகமது அலி. அவரது குடும்பத்தினரையே இந்த பாடுபடுத்தும் விமான நிலைய அதிகாரிகள், மற்ற முஸ்லிம்களையும் எவ்வளவு பாடுபடுத்துவார்கள்?’’ என வக்கீல் மன்சினி கவலை தெரிவித்துள்ளார்.

‘டிரம்ப் உத்தரவே காரணம்’

வக்கீல் மன்சினி கூறுகையில், ‘‘முகமது அலி குடும்பத்தினருக்கு நடந்த அவமானத்திற்கு, முழுக்க முழுக்க அதிபர் டிரம்ப் விதித்த விசா தடையே காரணம்’’ என்றார். அதிபராக பதவியேற்றதும் டிரம்ப், 7 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை விதித்தார். அந்த உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்த போதிலும், விமான நிலையங்களில் முஸ்லிம் மக்கள் இத்தகைய கெடுபிடிகளை சந்தித்து வருவதாக வக்கீல் மன்சினி கூறி உள்ளார். இதுபோல் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலை சேகரித்து வழக்கு தொடர உள்ளதாகவும் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.