கல்வித் தகுதி சர்ச்சை தொடர்பான வழக்கில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி
இரானிக்கு எதிரான மனுவை டெல்லி பெருநகர நீதிமன்றம் தள்ளுபடி செய்து
உத்தரவிட்டது.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி 2004, 2011, 2014ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற
தேர்தல்களின்போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களில் தனது கல்வித் தகுதி
தொடர்பாக பொய்யான தகவல்களை தெரிவித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போது தேர்தல் ஆணையத்திடம் ஸ்மிருதி
இரானி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், டெல்லி பல்கலைக்கழகத்தில்
பி.ஏ. இளங்கலை பட்டம் படித்ததாகக் குறிப்பிட்டிருந்தார். 2011-ம் ஆண்டு
குஜராத் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட போது,
டெல்லி பல்கலைக்கழகத்தில் தபால் வழியில் பி.காம் படித்ததாக கூறியிருந்தார்.
ஆனால், கடந்த 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட போது, டெல்லி
பல்கலைக்கழகத்தின் திறந்த நிலைப் பிரிவில் பி.காம் படித்ததாகக்
குறிப்பிட்டிருந்தார். இது நாடு தழுவிய அளவில் பெரும் சர்ச்சையாக
வெடித்தது. மேலும் தேர்தல் ஆணையத்திடம் பொய்யான தகவல்களை தெரிவித்ததாக
ஸ்மிருதி இரானிக்கு எதிராக வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது. இந்த வழக்கு
டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி ஹர்விந்தர் சிங்
முன்னிலையில் நடைபெற்று வந்தது.
அப்போது, அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கல்வித் தகுதி குறித்த ஆவணங்களைத்
தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கும், டெல்லி
பல்கலைக்கழகத்துக்கும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இதனையடுத்து தேர்தல் ஆணையம் ஸ்மிருதி இரானி தொடர்பான ஆவணங்களை தாக்கல்
செய்தது. இந்த வழக்கு தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட்ட
தீர்ப்பில், ஸ்மிருதி இரானிக்கு சம்மன் அனுப்ப மறுப்பு தெரிவித்து, வழக்கை
தள்ளுபடி செய்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
'இரானி அமைச்சராக இருப்பதால் தேவையற்ற தொந்தரவு கொடுப்பதற்காக இந்த வழக்கு
தொடரப்பட்டுள்ளது. பல வருடங்களாகி விட்டதால் உண்மை சான்றிதழ்கள் சேதமடைந்து
விட்டன, கோர்ட்டிற்கு நகல் ஆவணங்கள் தேவையில்லை. எனவே, ஸ்மிருதி இரானிக்கு
எதிராக சம்மன் அனுப்பக் கோரிய மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது'
என நீதிபதி தெரிவித்தார்.


No comments:
Post a Comment