Latest News

  

முதல்வர்கள் கூட்டத்தில் எடப்பாடி பங்கேற்கிறார்.. ஜெ.வின் உரை தயார்...அப்பல்லோவில் அதிரடி ஆலோசனை!


காவிரி விவகாரத்தில் இன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக உடனடியாக தலைமைச் செயலாளர், அரசு தலைமை வழக்கறிஞருடன் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் வைத்து நீண்ட ஆலோசனையை நடத்தி முடித்து விட்டார். அதை விட முக்கியமாக முதல்வர்கள் கூட்டத்தில் தான் பேச வேண்டியதை உரையாகவே அவர் சொல்ல அதை அதிகாரிகள் தயாரித்து முடித்தும் விட்டனராம். செப்டம்பர் 29ம் தேதி டெல்லியில் இரு மாநில முதல்வர்கள் கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது. அக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா சார்பில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காவிரி வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் கர்நாடகத்திற்கு சரியான சூடு வைத்தது. இதையடுத்து தமிழக, கர்நாடக மாநில முதல்வர்களுடன் பேச்சு நடத்த ஏற்பாடு செய்வதாக மத்திய அரசு கூற, அதை சுப்ரீம் கோர்ட் ஏற்றது. இதையடுத்து இரு மாநில முதல்வர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. 3 நாட்களுக்குள் இக்கூட்டம் கூட்டப்பட வேண்டும். அனேகமாக 29ம் தேதி இந்தக் கூட்டம் கூட்டப்படும் என்று தெரிகிறது. இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா இன்று அப்பல்லோ மருத்துவமனையில் வைத்தே ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடித்து விட்டார். தலைமைச் செயலாளர், அரசு தலைமை வழக்கறிஞர் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களுடன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தினார் முதல்வர். பின்னர் முதல்வர்கள் கூட்டத்தில் தான் பேச வேண்டியதை அவர் சொல்ல அதை உரையாக தயாரிக்கப்பட்டு விட்டதாம். இதையடுத்து டெல்லியில் நடைபெறும் முதல்வர்கள் கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பார். அவர் முதல்வரின் உரையை சமர்ப்பிப்பார். இக்கூட்டத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், பொதுப்பணித்துறைச் செயலாளர், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் ஆகியோரும் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.