மதுபோதையில் கார் ஓட்டி, போலீஸ் வாகனம் மீது மோதி விபத்து ஏற்படுத்திய நடிகர் அருண் விஜய் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகர் விஜயகுமாரின் மகன் அருண்விஜய். பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல ஸ்டார் ஹோட்டலில் நேற்று நடிகை ராதிகா சரத்குமார் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் விஜயகுமாரின் மகனான, நடிகர் அருண் விஜய் பின்னர் வீடு திரும்பினார்.
அப்போது, தனது ஆடி காரில் அதிவேகமாக வந்த அவர், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தின் எதிரே நின்று கொண்டிருந்த போலீசாரின் வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது. காரில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இருந்ததால் அருண் விஜய் காயங்கள் இன்றி தப்பினார். இதில் போலீஸின் வாகனம் சேதம் அடைந்தது. சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
போலீசார் அருண் விஜய்யிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர், அளவுக்கு அதிகமாக குடிபோதையில் காரை ஓட்டியது தெரியவந்தது. நுங்கம்பாக்கம் காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்திய நிலையில் நடிகர் விஜயகுமார் நுங்கம்பாக்கம் காவல்நிலையம் வந்தார்.
No comments:
Post a Comment