Latest News

வானொலிகளில் தமிழ் செய்தி ஒலிபரப்பை நிறுத்த வேல்முருகன் கடும் எதிர்ப்பு


அரசு வானொலிகளில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளின் செய்தி ஒலிபரப்பை நிறுத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளின் செய்தி சேவைகளை மத்திய அரசு நிறுத்தப் போவதாக செய்திகள் வெளியாகி இருந்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திருச்சி, இந்தூர், பூஜ், கோழிக்கோடு உள்ளிட்ட வானொலி நிலைய செய்திகள்,நிகழ்ச்சிகள் மறு உத்தரவு வரும் வரை தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநில மொழி செய்திகளை மூடுகிற மத்திய அரசின் திட்டம் படிப்படியாக அரங்கேறத் தொடங்கியிருப்பது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பு. இங்கு ஒரு மொழிதான் ஆதிக்க செலுத்த முடியும் என்பதை எந்த ஒரு தேசிய இனமும் ஏற்காது. மத்தியில் பாஜக ஆட்சியில் அமர்ந்தது முதலே சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சிக்கிறது. இந்தியை முழுவீச்சில் இந்தியாவின் ஒற்றைமொழியாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கக் கூடிய ஒன்று பல்வேறு தரப்பினரும் எச்சரித்தும் மத்திய பாஜக அரசு ஒற்றை இந்தியா- இந்தி என்ற திசைவழியில் பயணத்தைத் தொடர்கிறது. இதன் ஒரு கட்டமாகவே தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளின் வானொலி செய்தி சேவைகளை நிறுத்திவிடும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது கண்டிக்கத்தக்கது. தற்போது திருச்சி வானொலியில் செய்தி ஒலிபரப்பு தொடரும் என அறிவித்திருக்கும் மத்திய அரசின் அறிவிக்கையிலும் கூட 'மறு உத்தரவு' வரும் வரை என கூறியிருப்பது எதிர்காலத்தில் நிச்சயம் தமிழ் வானொலி செய்திகளை இழுத்துமூடத்தான் போகிறது என்பதையே சுட்டிக்காட்டுகிறது. தமிழகத்தின் வாழ்வுரிமை பிரச்சனைகளில் தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய அரசு தற்போது என்.எல்.சி.யில் நெய்வேலி பெயர் நீக்கம், புதிய கல்விக் கொள்கை, தமிழ் செய்தி ஒலிபரப்பு நிறுத்தம் என அடுத்தடுத்து தமிழின அடையாள அழிப்புகளில் தீவிரம் காட்டுவதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ் வானொலி செய்தி ஒலிபரப்பை இழுத்து மூடும் மத்திய அரசின் முடிவை திரும்பப் பெறாவிட்டால் தமிழகம் கொந்தளிக்கும் நிலையை நோக்கித்தான் செல்லும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம். இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.