மத்திய பட்ஜெட் வருகிற பிப்ரவரி 29–ந் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
பாராளுமன்றம் கூடுகிறது
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த ஆண்டு நவம்பர் 26–ந் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 23–ந் தேதி வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் பல நாட்கள் அமளி ஏற்பட்டதால் சபை நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில், இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் பிப்ரவரி மாதம் தொடங்க இருக்கிறது. இது பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகும். முதல் நாள் கூட்டம் பாராளுமன்ற மக்களவை மற்றும் மேல்–சபை உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கூட்டு கூட்டமாக நடைபெறும். இந்த கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்துவார். அதன்பிறகு வரும் நாட்களில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும்.
பட்ஜெட் தாக்கல்
2016–2017–ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பொது பட்ஜெட் (வரவு–செலவு திட்டம்) பிப்ரவரி 29–ந் தேதி தாக்கல் செய்யப்பட இருப்பதாக நிதி இலாகா ராஜாங்க மந்திரி ஜெயந்த் சின்கா நேற்று டெல்லியில் தெரிவித்தார்.
நிதி மந்திரி அருண் ஜெட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்வார். அப்போது புதிய வரிகள், வரிச்சலுகைகள் பற்றிய அறிவிப்பை அவர் வெளியிடுவார். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி உற்பத்தியை பெருக்குவதற்கான அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொது பட்ஜெட்டுக்கு 2 நாட்கள் முன்னதாக ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.


No comments:
Post a Comment