கனமழை வெள்ளத்தால் சென்னை மாநகரில் கடந்த 48 மணிநேரமாக மின்சாரம் இல்லை, தகவல் தொடர்பு வசதியில்லாமல் தவிக்கின்றனர். போக்குவரத்து வசதியில்லாமல் வீட்டை விட்டு நகரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை நகரின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளதால் சென்னையை பேரிடர் பகுதியாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் கடந்த ஞாயிறு இரவு சாரலாக தொடங்கிய மழை, திங்கட்கிழமை பிற்பகலில் கனமழையாக தொடங்கியது. விடாமல் விடிய விடிய கொட்டிய மழை புதன்கிழமை அதிகாலையில்தான் சற்றே ஓய்ந்தது. ஏற்கனவே நிரம்பியிருந்த ஏரிகள், இந்த மழை நீரை தாக்கு பிடிக்க முடியவில்லை. இதன் காரணமாக உபரிநீர் அப்படியே வெளியேற்றப்பட்டன.
சென்னையில் பேரழிவு சென்னையில் வரலாறு காணாத அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், பேரழிவைச் சந்தித்துள்ளது. முக்கிய பாலங்கள் மூழ்கியதாலும், சாலைகளில் வெள்ளம் தேங்கியிருப்பதாலும் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. கரையோரங்களில் தங்கியுள்ள பொதுமக்கள் பல லட்சம் பேர் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
எங்கும் வெள்ளக்காடு பெரும்பாலான பகுதிகள் 8 அடி வரை வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அண்ணாசாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளத்தில் டிவி, சிலிண்டர்கள் அடித்து செல்லப்பட்டன. மொபைல், ஏடிஎம் சேவைகள் அடியோடு முடங்கின.
பால் அரைலிட்டர் ரு.100 வெள்ளத்தை காரணம் காட்டி, அரைலிட்டர் பால் 100 ரூபாய்க்கும், வாட்டர்கேன் 75 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது, காய்கறிகள் கொள்ளை விலைக்கு விற்கப்பட்டன. மருத்துவமனைகளில் நோயாளிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.
மருத்துவமனைகளுக்குள் வெள்ளம் அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாது சில தனியார் மருத்துவமனைகளில் ஜெனரேட்டர் அறைகளில் வெள்ளம் புகுந்ததால் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது. சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் உச்சகட்ட பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பேரிடர் பகுதி பேரிடர் பகுதியாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் தொடர்ந்து 4 நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. கடும் மழையால் முற்றிலும் பாதிக்கப்பட்ட சென்னை பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 80 படகுகளுடன் 29 தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்திய கடற்படைக்கு சொந்தமான 15 ஹெலிகாப்டர்களும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளன.
மின்சாரம் துண்டிப்பு சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையால் 48 மணிநேரமாக நாளாக மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. பல பகுதிகளில் 3 நாட்களாக மின்சாரம் இல்லாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மூழ்கிய பாலங்கள் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டாலும், நகரில் பெய்த மழையின் காரணமாக அடையாறு ஆற்றில் மட்டும்50 ஆயிரம் கன அடி வந்ததால் மொத்தம் 80 ஆயிரம் கன அடி நீர் செல்கிறது. அடையாறு ஆற்றில் ஈக்காடு தாங்கல் பாலம், கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, திருவிக பாலம் ஆகிய பாலங்களை மூழ்கடித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பாலங்கள் தொடங்கும் இரு பகுதியிலும் பல அடி உயரத்துக்கு தண்ணீர் சூழ்ந்தது. உடனடியாக இந்த பாலங்களில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
தி. நகரில் வெள்ளம் தியாகராயநகரில் ஆளை மூழ்கடிக்கும் அளவிற்கு வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அடையாறு ஆற்றின் வெள்ளம் நந்தனம் தாண்டி தியாகராயநகரை எட்டியது தி.நகர் பேருந்து நிலையம் வெள்ளத்தில் மிதக்கிறது. பிரபல ஜவுளிக்கடைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. போட் மூலம் மீட்க கோரி தியாகராய மகாலட்சுமி நகர்வாசிகள் உதவிக்கு அழைத்து வருகின்றனர்.
மயிலாப்பூர் வெள்ளம் கூவம், அடையாறுகளில் பெருக்கெடுத்துள்ள வெள்ளம் பக்கிங்காம் கால்வாயில் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் கரையோரம் வசிக்கும் சிலேட்டர்புரத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இந்த பகுதிகள் அனைவரும் மீட்கப்பட்டு மாநகராட்சி பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பழுதான வாகனங்கள் நகருக்குள் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதாலும், சாலைகளில் வெள்ளம் வடியாமல் உள்ளதாலும் பல லட்சம் வாகனங்கள் பழுதாகி ஆங்காங்கே நிற்கின்றன. பள்ளங்கள் அதிகமாக இருப்பதாலும், பலர் அதில் சிக்கி மீட்கப்பட்டதாலும் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். மேலும் வெள்ளத்தில் பலர் அடித்துச் செல்லப்பட்டதாக தீயணைப்பு மற்றும் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
உணவு, குடிநீர் இல்லை கனமழை ஓய்ந்து, சாரல் மழை பெய்வதால் மக்கள் சற்றே நிம்மதியடைந்துள்ளனர். எனினும் ஏரிகளில் இருந்து திறந்து விடப்படும் வெள்ளநீரில் சென்னையில் பெரும்பாலானபகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் வெள்ளத்தில் சிக்கியவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். பெரும்பாலோனோர் குடிநீர், உணவு இன்றி தவித்து வருகின்றனர்.
சொந்த ஊரில் அகதிகளான மக்கள் வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்க கூட மீட்பு பணிகளில் செல்ல முடியாத அளவுக்கு நகர் முழுவதுமே வெள்ளக்காடாக இருப்பதால், மக்கள் பரிதவித்து வருகின்றனர். உடமைகளை இழந்து, வீடுகளை இழந்து, உணவு இன்றி, தொலை தொடர்பும் இன்றி, மின்சாரம் இன்றி, தொடர் மழையில் மக்கள் கடும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். சொந்த ஊரிலேயே அகதிகளாக மக்கள் தவித்து வருகின்றனர் என்பதுதான் சோகம்.
No comments:
Post a Comment