முல்லைப் பெரியாறு அணை 140 அடியை எட்டியுள்ளதால் அணைப் பகுதியில் தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் முகாமிட்டு அணையை கண்காணித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து 138 அடியைத் தாண்டியது. இதையடுத்து அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் உயரும் போது செய்ய வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், உபரி நீரை வெளியேற்றுவதற்கு ஏற்ப அணையின் மதகுகளை சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகளுக்காக துணைக் காண்காணிப்பு குழுவினர் கடந்த சில நாட்களாக அணையை ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழையினால் நீர் மட்டம் 139.80 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 1395 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 511 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 140 அடியை எட்டியதும் வல்லக்கடவு முதல் இடுக்கி அணை வரை உள்ள பகுதி மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். இதற்காக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையிலும், தேக்கடியிலும் முகாமிட்டுள்ளனர். வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவர்கள் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். காலைக்குள் நீர்மட்டம் 140 அடியை எட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடிக்கு மேல் உயர்ந்திருப்பது இது 2-வது முறையாகும்.
No comments:
Post a Comment