Latest News

ஆமீர்கானை அறைந்தால் ரூ.1 லட்சம் பரிசு: சிவசேனை அதிர்ச்சி அறிவிப்பு


ஆமீர்கான் கன்னத்தில் அறைவோருக்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று பஞ்சாப் மாநில சிவசேனா அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில், சகிப்புத்தன்மை குறைந்துவிட்டதால், தனது மனைவி, கிரண், வெளிநாடு போகலாம் என தன்னிடம் கூறியதாக, நடிகர் ஆமீர்கான் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியிருந்தார். இந்தியாவை அவமதிக்கும்வகையில் ஆமீர் பேசியதாக கூறி, சமூக வலைத்தளங்களில் சிலர் எதிர்ப்பு தெரிவிக்க, சிலரோ அவரது கருத்தை மட்டுமே பார்க்குமாறு ஆதரவு குரலையும் எழுப்பினர்.

இந்நிலையில், ஆமீர்கான், தான் நடித்துவரும் டன்கல் என்ற படத்தின் சூட்டிங்கிற்காக பஞ்சாப் மாநிலம் லூதியானாவுக்கு சென்றிருந்தார். அங்கு அவர் தங்கியிருந்த ஹோட்டலின் வெளியே, பஞ்சாப் சிவசேனை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்தின்போது, ஆமிர்கானின் போட்டோக்களை எரித்து சிவசேனா எதிர்ப்பை காட்டியது. அப்போது பேசிய சிவசேனையின் பஞ்சாப் மாநில தலைவர் ராஜிவ் தாண்டன் "ஆமீர்கானை அறைந்தால், அவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு தரப்படும். இந்த ஹோட்டலின் மேனேஜரோ, அல்லது ஊழியரோ, திரைப்படத்தில் பணியாற்றும் ஊழியர்களோ கூட ஆமீர்கானை அடித்து ரூ.1 லட்சம் பரிசை பெற்றுக்கொள்ளலாம். தைரியமும், தேசப்பற்றும் கொண்ட இந்தியர்கள், ஆமீர்கானை லூதியானாவில் வைத்து அடித்து ரூ.1 லட்சத்தை பரிசாக பெறலாம்" என்று கூறினார். இந்த பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வன்முறையை தூண்டிய பேச்சுக்காக ராஜிவ் தாண்டன் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. இதனிடையே ஆமீர்கான் லூதியானாவில் இருந்து வெளியேறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.