Latest News

ஆரம்பிச்சுட்டாங்கய்யா... மெட்ரோ ரயிலில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 2 கோடி மோசடி- 5 பேர் கைது



சென்னை மெட்ரோ ரயிலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி ரூ. 2 கோடி மோசடி செய்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கோயம்பேட்டியில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிலைய மேலாளர் குருநாதன் வளசரவாக்கம் போலீஸில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ‘சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக சிலர் பொது மக்களிடம் பணம் பெற்றுக் கொண்டு போலி நியமன ஆணைகள் வழங்கி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அவர் கூறியிருந்தார்.

இப்புகாரின் அடிப்படையில் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவுப்படி தியாயராய நகர் துணை கமிஷனர் சரவணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சேட்டு மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், சைதாப்பேட்டை, சின்னமலையை சேர்ந்த பால்ராஜ், கோவை சிங்கா நல்லூரை சேர்ந்த மகேந்திரன், அவரது மனைவி ராஜாத்தி, நாகராஜ், வத்தலகுண்டு அர்ஜூன்குமார் ஆகியோர் சென்னையில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி, மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

இதையடுத்து ஆற்காடு சாலையில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த பால்ராஜ் உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், பால்ராஜ் இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட மற்ற 4 பேரும் பால்ராஜூக்கு ஏஜெண்டுகள் மூலம் ஆட்களைப் பிடித்துத் தந்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பதவிக்கேற்றார் போல் ரூ.15 லட்சம் முதல் 30 லட்சம் வரை பால்ராஜ் பணம் பெற்று உள்ளார். இதுவரை சுமார் 100-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.2 கோடி வரை அவர் மோசடி செய்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது அவர்களிடம் இருந்து ரூ.86 ஆயிரம் ரொக்கம், 68 வங்கி காசோலைகள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான பால்ராஜ் உள்பட 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.