ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளன் சிறுநீர் தொற்றுநோயால் அவதியுறுவதாக அவரது தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 23 ஆண்டுகளாக ஜெயிலில் உள்ளனர்.
இந்த நிலையில் வேலூர் சிறையில் பேரறிவாளனை சந்தித்தப்பிறகு செய்தியாளர்களிடம் இதுகுறித்து தெரிவித்த அவரது தாயார் அற்புதம்மாள், "பேரறிவாளன் நோய் கொடுமையால் அவதிப்பட்டு வருகிறான். அவனுக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறுநீர் தொற்று பிரச்சினைக்கு சிகிச்சை அளிக்க வேலூரில் போதிய வசதிகள் இல்லை.
எனவே சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டுமென சிறைத்துறை டி.ஐ.ஜி.யிடம் அவன் மனு அளித்து உள்ளான். பேரறிவாளன் விரைவில் குணமடைவான் என்ற நம்பிக்கை உள்ளது." என்றார்.


No comments:
Post a Comment