ஊழலை ஒழிக்க புதிய நடவடிக்கையாக பீகார் மாநில போலீஸ்காரர்களை அமர்த்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லியில் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சி நடத்தி வருகிறது ஆம் ஆத்மி கட்சி. டெல்லி முதல்வராக பதவியேற்றதும் முதல் நடவடிக்கையாக ஊழலை ஒழிக்க புதிய அமைப்பு ஒன்றை ஏற்படுத்தினார் கெஜ்ரிவால். இந்த அமைப்புக்கு தினமும் ஏராளமான போன் கால்கள் வந்தன. இதனால், டெல்லியில் ஊழல் கட்டுக்குள் வந்ததாகக் கூறப்பட்டது.
இந்த சூழ்நிலையில், அதிகாரிகளை நியமனம் செய்யும் விவகாரத்தில் டெல்லி கவர்னர் நஜீப் ஜங்குக்கும், முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக அறிவிக்கை வெளியிட்ட மத்திய அரசு, ‘‘கவர்னருக்கே அதிகாரிகளை நியமனம் செய்ய, போலீசை கட்டுப்படுத்த அதிகாரம் உள்ளது'' என அறிவித்தது. இதனால், கெஜ்ரிவாலின் ஊழல் தடுப்பு அமைப்புக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டது. எனவே, தனது ஊழல் தடுப்பு அமைப்பை காப்பாற்ற புதிய நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுள்ளார் கெஜ்ரிவால். அதன்படி, ஊழல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட பீகார் மாநிலத்தில் இருந்து போலீஸ்காரர்களை வாடகைக்கு பெற அவர் திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் டெல்லி வந்திருந்த போது, அவரிடம் பேசினார் கெஜ்ரிவால்.
நீண்ட விவாதத்துக்குப் பிறகு பீகார் மாநில போலீஸ்காரர்களை குறிப்பிட்ட காலத்துக்கு டெல்லிக்கு வாடகைக்கு விட நிதீஷ்குமார் சம்மதித்தார். அதன்படி, முதல்கட்டமாக ஒரு டிஎஸ்பி மற்றும் 5 இன்ஸ்பெக்டர்கள் பீகார் மாநில காவல்துறை விடுவித்துள்ளது. அந்த போலீசார் தற்போது டெல்லி ஊழல் தடுப்பு பிரிவில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கெஜ்ரிவாலின் இந்த வாடகைப் போலீஸ் நடவடிக்கையால் டெல்லி அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனது இந்தப் புதிய திட்டம் தொடர்பாக கெஜ்ரிவால், டெல்லி கவர்னர் நஜீப் ஜங்குடனோ அல்லது டெல்லியின் சட்டம் ஒழுங்கைக் கவனிக்கும் காவல்துறையை கையில் வைத்துள்ள மத்திய உள்துறை அமைச்சகத்துடனோ கலந்தாலோசிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே 6 போலீசார் டெல்லி மாநிலத்துக்கு வாடகையாக கொடுக்கப்பட்டிருப்பது பீகார் மாநிலத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment