முக ஸ்டாலின் எந்தத் தொகுதியில் நின்றாலும் அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்ற குஷ்புவின் 'லட்சியத்துக்கு' தோள்கொடுக்க தயாராகிறது தமிழக பாஜக என்ற செய்தி தமிழக அரசியலில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
திமுகவில் குஷ்பு இணைந்தது, அங்கு அவருக்குக் கிளம்பிய எதிர்ப்புகள், சொந்தக் கட்சியினரே குஷ்பு மீது செருப்பு வீசியது, திமுக தலைவருடன் அவரை இணைத்துப் பரப்பப்பட்ட அநாகரீக அவதூறுகள்... இவையெல்லாம் 'குஷ்பு அரசியலில்' மறக்க முடியாத நிகழ்வுகள்.
குறிப்பாக தன்னை திமுகவிலிருந்து விரட்ட ஸ்டாலின் தரப்பும் அவரது குடும்பத்தினரும் செய்தவற்றை அத்தனை சுலபத்தில் மறக்கமுடியாமல் தவிக்கிறாராம் குஷ்பு.
திமுகவிலிருந்து விலகி, இப்போதைக்கு அரசியல் பற்றி எதுவும் பேசாமலிருந்தாலும், குஷ்புவுக்கு தமிழகக் கட்சிகளிடம் ஏக வரவேற்பு உள்ளது.
அவர் அதிமுகவில் சேருவார், பாஜகவில் சேருகிறார் என்றெல்லாம் அடிக்கடி ஹேஷ்யங்கள் உலா வருகின்றன.
இந்த நிலையில், அவரை பாஜகவின் தமிழக தலைவரான தமிழிசை சவுந்தர்ராஜனே நேரில் சென்று பாஜகவுக்கு அழைத்துள்ளாராம்.
அப்போது தமிழிசையிடம் குஷ்பு வைத்த முக்கிய நிபந்தனையே, ஸ்டாலின் எந்தத் தொகுதியில் நின்றாலும், அவரை எதிர்த்து நிற்க அனுமதிக்க வேண்டும், வீழ்த்த உதவ வேண்டும் என்பதுதானாம்.
இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட தமிழிசை, குஷ்புவின் வரவை உறுதிப் படுத்திக் கொண்டு மேலிடத்துக்கும் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு ஆரம்பத்திலேயே குஷ்புவின் பாஜக பிரவேசத்தை எதிர்ப்பார்க்கலாம் என்கிறார்கள்.
No comments:
Post a Comment