தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்கள் சார்பில் இலங்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை சேர்ந்த எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத் மற்றும் லாங்லெட் ஆகிய 5 மீனவர்களை, எல்லைத்தாண்டி சென்றதாக கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதன் பின்னர் 5 பேர் மீதும் போதைப்பொருள் கடத்தியதாக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இலங்கை கொழும்பு நீதிமன்றம் 5 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்தது.
இந்த தண்டனைக்கு எதிராக இலங்கை உச்சநீதிமன்றத்தில் மீனவர்கள் சார்பாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையே திடீரென, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேருக்கும் பொதுமன்னிப்பு கொடுக்க இலங்கை அதிபர் ராஜபக்சே தயாராக இருப்பதாகவும், மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற்றால்தான் அதுசாத்தியம் என்று இலங்கை மந்திரிகள் சிலர் தெரிவித்தனர்.
இந்தநிலையில் தமிழக மீனவர்கள் 5 பேரின் மேல்முறையீட்டு மனு இலங்கை உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெறுவதாக மீனவர்களின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ராஜபக்சேவின் உத்தரவின் அடிப்படையில், மீனவர்களின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு, விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

No comments:
Post a Comment