சார் புதுசா ஒரு ஐ-பேட் வாங்கினோம். எப்படி ஆபரேட் பண்ணுறதுன்னு முழிச்சிக்கிட்டிருந்தப்ப, டென்த் படிக்கிற எங்க பையன் அசால்ட்டா ஆபரேட் பண்ணிட்டான் சார். கம்ப்யூட்டரில் பூந்து விளையாடுறான். பார்ட் பார்ட்டா கழட்டி, அசெம்பிள் பண்ணிடுறான். செவன்த் படிக்கிற எங்க பொண்ணும் ஃபேஸ்புக்கு, இ-மெயிலுன்னு கலக்கிக்கிட்டிருக்கா சார்”
தங்கள் பிள்ளைகளின் தகவல் தொழில் நுட்பத் திறமை பற்றி இப்படிச் சொன்ன எக்ஸ்போர்ட் கம்பெனி பிராஞ்ச் மேனேஜர் கார்த்திகேயன் போன்றவர்களுக்கு இந்த திறமையின் பின்னே அறிவுடன் ஆபத்தும் கலந்திருக்கிறது என்பது ரொம்பவும் லேட்டாகத்தான் தெரிய வருகிறது. சீட் வாங்குவதே குதிரைக்கொம்பு என்று சொல்லக்கூடிய சென்னை யின் பிரபல மூன்றெழுத்துப் பள்ளியில்ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருத்தியும் இப்படித்தான் தகவல் -தொழில்நுட்பத்தில் எக்ஸ்பர்ட் என்று பெயரெடுத்திருந்தாள். சுறுசுறு துறுதுறு மாணவியான அவள் சில நாட்களாக ரொம்பவும் டல்லடிப்பதைப் பார்த்து, டாக்டரிடம் கூட்டிச் சென்றார்கள். செக்கப் செய்த லேடி டாக்டரிடமிருந்து வெளிப்பட்ட ரிசல்ட் அதிர்ச்சியடைய வைத்தது. காரணம், அந்த மாணவி கருவுற்றிருந்தாள்.
எந்தெந்த திறமைகளுக்காக அவளைப் பெற்றோரும் ஆசிரியைகளும் பாராட்டினார்களோ, அதே விஷயங்களுக்காக அவளைக் கண்டபடி திட்ட ஆரம்பித்தார்கள். அவளுடைய இ-மெயில் இன்பாக்ஸிலும், ஃபேஸ் புக் மெசேஜ் பாக்ஸிலும் குவிந்திருந்த பாய் ஃப்ரென்ட்ஸின் ரொமான்ட்டிக் சாட்டிங்குகளும், செல்போனில் வந்த எஸ்.எம்.எஸ்.களும், இந்தத் தகவல் – தொழில்நுட்பம்தான் அவள் சம்பந்தப்பட்ட அதிர்ச்சி ரிசல்ட்டுக்குக் காரணம் என்பது தெரியவந்தது.
சென்னை உள்ளிட்ட இந்தியாவின் மெட்ரோபாலிட்டன் சிட்டிகளில் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியின் வளர்ச்சி எந்தளவுக்கு குழந்தைகள்-மாணவர்கள்-இளைஞர்களின் அறிவைப் பெருக்குகிறதோ, அதே அளவுக்கு சற்றும் குறைவில்லாமல் அழிவுப்பாதைக்கும் திசை திருப்புகிறது என்பதை சமூக ஆர்வலர்களும் கல்வியாளர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.
இந்தியாவில் 55% மக்கள் கழிப்பிட வசதியில்லாமல் இருக்கிறார்கள். ஆனால், 65%க்கும் அதிகமான மக்களிடம் செல்போன் இருக்கிறது. இது அண்மையில் கிடைத்த புள்ளி விவரம். செல்போனைத் தாண்டி, கம்ப்யூட்டர், லேப்டாப், இன்டர்நெட், ஐ-பேட் என்று புதுசு புதுசாக தகவல்-தொழில் நுட்ப சாதனங்கள் தாராளப் புழக்கத்தில் உள்ளன.
இப்ப பிள்ளைகள் அவங்களே இன்டர்நெட் மூலமா எல்லாத்தையும் டவுன்லோட் பண்ணிடுறாங்க.ப்ராட்பேண்டுக்கு ஒழுங்கா பில் கட்டுறது மட்டும்தான் என்னோட வேலை. என்னைவிட என் பிள்ளைகள் அறிவாளிகளாக இருக்கிறார்கள்” என்கிறார் இரண்டு குழந்தைகளின் தந்தையான முரளி.
ஒரு குழந்தை, இரு குழந்தை உள்ள வீடுகளில், பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவதேபெற்றோரின் கடமை என்ற மனநிலை இருப்பதால், ஐ-பேட் உள்பட எல்லாவற்றையும் வாங்கிக் கொடுத்துவிடுகிறார்கள். இதுபோன்ற கருவிகளுடன் தான் குழந்தைகள் அதிக நேரத்தைச் செலவழிக்கின்றன. போதாக்குறைக்கு, டி.வி. சேனல்களின் நிகழ்ச்சிகளும் நேரத்தை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. வீட்டில் குழந்தைகளும் பெற்றோரும் ஒன்றாகச் செலவிடும் நேரம் மிகவும் குறைவாக இருக்கிறது.
இதன் காரணமாக, குழந்தைகளின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. உடல்ரீதியான தவறிழைத்தல்களுக்கும் வழிவகுக்கின்றன. பழக்கவழக்கங்கள் பேச்சு வார்த்தைகள் இவை மோசமானதாக மாறுகின்றன. “பெரிய பருப்பா’ என்ற வார்த்தை சர்வசாதாரணமாக குழந்தைகளின் வாயிலிருந்து வெளிப்படுகிறது. அதுபோல இளம்பெண்கள் பலரும் “டுபுக்கு’ என்கிறார்கள். இந்தச் சொற்கள் எதைக் குறிக் கின்றன என்பதைக்கூட அவர்கள் அறிந்திருப்பதில்லை.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் உறுப்பினராக முடியும். ஆனால், பள்ளி மாணவ-மாணவிகள் தங்களின் ஃபாய் ஃப்ரெண்ட்ஸ், கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் தேடலுக்காக பிறந்த தேதியை மாற்றிப் பதிவு செய்து உறுப்பினர்களாகி விடுகிறார்கள். சாட்டிங் வசதிகள் மூலமாக டேட்டிங், ஃப்ரீசெக்ஸ் பற்றியெல்லாம் பேசத்தொடங்கி, பின்னர் நேரில் அறிமுகமாகி, தீம்பார்க்-ஷாப்பிங் மால்-ரிசார்ட்ஸ் எனத் தனிமை நாடி செல்கின்ற அளவுக்கு நிலைமை முற்றிவிடுகிறது. இந்தப் போக்கு சென்னை போன்ற நகரங்களில் அதிகரித்து வருவதால் தகவல்-தொழில் நுட்ப வளர்ச்சி என்பது வரமா, சாபமா என்ற கேள்வி எழுகிறது.
ஒரே வீட்டில் உட்கார்ந்துகொண்டு “சாப்பிட வருகிறீர்களா’ என்று மனைவி எஸ்.எம்.எஸ். அனுப்புவதும், அதற்கு கணவனும் பிள்ளைகளும் பதில் எஸ்.எம்.எஸ் அனுப்புவதும் வளர்ந்துகொண்டிருந்தால் தகவல்- தொழில்நுட்ப வளர்ச்சி என்பது தறிகெட்ட நிலைமையைத்தான் உருவாக்கும். “அளவுக்கு மிஞ்சினால்’ என்ற பழமொழி, இந்தத் தகவல்தொழில்நுட்பக் காலத்திலும் அர்த்தமுடையதாகவே இருக்கிறது.
No comments:
Post a Comment