சென்னையில் பொறியியல் பட்டதாரி ஒருவர் ஐ.பி.எஸ் அதிகாரி போல் நடித்து 9 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அயனாவரம் பழனி ஆண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்த பாலமணிகண்டன்(27) என்பவர் மீது, கல்லூரி மாணவி ஒருவர் சென்னை டி.பி.சத்திரம் பொலிசாரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த மனுவில், பாலமணிகண்டன் என்பவர் தன்னை ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி என்று பொய் சொல்லி காதலித்தார் என்றும், தன்னை பதிவு திருமணம் செய்து கொண்டு 90 சவரன் நகைகளை பறித்துக் கொண்டார் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து, பாலமணிகண்டனை கைது செய்து தற்போது புழல் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
பொலிசார் விசாரணையில் பாலமணிகண்டனைப் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த நபர் பாலமணிகண்டன், பாலா, சூர்யா போன்ற பல்வேறு பெயர்களில், ஐ.பி.எஸ். அதிகாரியாக நடித்து நிறைய பெண்களிடம் இணையதளம் மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.
பெரும்பாலும் மருத்துவம் மற்றும் பொறியியல் படித்த பெண்களிடம் மட்டும் பேசும் இவர், பணவசதி படைத்தவர்களாக இருந்தால் அவர்களை மயக்கி காதலித்து பின்னர் பதிவு திருமணமும் செய்து கொள்வார்.
இவ்வாறு ரகசிய திருமணம் செய்யும் இவர், பின்னர் அந்த பெண்களிடம் நகை மற்றும் பணத்தை மோசடி செய்துவிட்டு தப்பிவிடுவார்.
9 பெண்களை ஏமாற்றியுள்ள இந்த நபர், இந்த பெண்களிடம் இருந்து 150 சவரன் தங்க நகைகள் மற்றும் கார்களையும் பறித்துள்ளார்.
தற்போது சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில், பெண் பொறியாளர் ஒருவர் இந்த நபர் மீது, தன்னை காதலித்து மணந்து 40 சவரன் நகைகளை மோசடி செய்துள்ளதாக புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment