தமிழகத்தை பொறுத்தவரை மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவதால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகிறது. இதனால் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் டிசம்பர் ஆகிய மாதங்களில் வாந்தி, வயிற்றுப்போக்கு, காலரா, மலேரியா, டெங்கு ஆகிய நோய்கள் பரவ அதிக வாய்ப்புகள் உள்ளன. அந்த வகையில் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் மர்மக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு தமிழகம் முழுவதும் இதுவரை 4 பேர் வரை பலியாகி உள்ளனர். இதனால் இந்த தொற்று நோய்களுக்கான தடுப்பு நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை அனைத்து ஆரம்பசுகாதார நிலையங்களுக்கும் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் டெங்கு பாதிப்பு இல்லவே இல்லை என்று கூறமுடியாது.
ஒரு சில பகுதிகளில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. மாநிலத்தில் உள்ள ஒருசில மாவட்டங்களில் இந்த காய்ச்சல் பாதிப்பு தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா, மர்மக்காய்ச்சல் போன்ற நோய்களை பரவாமல் தடுப்பதற்காக சுகாதாரப்பணிகளில் தமிழகம் முழுவதும் தற்போது கூடுதலாக சுமார் 20 ஆயிரம் தற்காலிக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். டிசம்பர் மாதம் வரை இந்த ஊழியர்கள் பணிகளில் ஈடுபடுவார்கள் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment