சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வன்முறைப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
பஸ் மறியல், கடையடைப்பு, கல்வீச்சு, கொடும்பாவி எரிப்பு, திமுக அலுவலங்கள், வீடுகள் மீது தாக்குதல் என வன்முறை வெடித்துள்ளது.
சென்னையில் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டப் பகுதியில் திமுக தலைவர் கருணாநிதி, சுப்பிரமணியம் சாமி உள்ளிட்டோரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. சென்னையின் பல பகுதிகளில் பஸ்கள் மீது கல்வீச்சுத் தாக்குதலும் நடந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கருணாநிதி கொடும்பாவி எரிப்பு
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கருணாநிதியின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. கடைகளை அடைக்க்ச சொல்லி ஒரு கும்பல் வலியுறுத்தியதால் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. ஆலங்குள்தில் பஸ்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சங்கரன்கோவிலில் 2 பஸ்கள் தாக்கி சேதப்படுத்தப்பட்டன.
மதுரை, கோவை, திருச்சி உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் சிறிய அளவிலான வன்முறைகள் நடந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
புதுக்கோட்டை - திமுக அலுவலகம் மீது கல்வீச்சு
புதுக்கோட்டையில் உள்ள திமுக அலுவலகம் மீது அதிமுகவினர் கல்வீசித் தாக்குதல் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அடுத்தடுத்து 3 முறை கல்வீ்ச்சு சம்பவம் நடந்ததால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். தனியார் பேருந்துகள் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டு விட்டன. சாலைகளில் போக்குவரத்து குறைந்து பரபரப்பான சூழல் நிலவுகிறது.
மதுரையில் கல்வீச்சு - கடையடைப்பு - பஸ் போக்குவரத்து பாதிப்பு
மதுரையில் பல இடங்களில் கல்வீச்சுச் சம்பவங்கள் நடந்துள்ளன. பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் கட்சி அலுவலகத்தில் அதிமுகவினர் குவிந்துள்ளனர்.
கர்நாடக, கேரளப் பேருந்துகள் நிறுத்தம்
கேரளாவில் இருந்து கன்னியாகுமரி வழியாக வரும் பேருந்துகளும், அதேபோல கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment