Latest News

  

அலைபேசி அருமைகளும், அவலங்களும்


மோட்டாரோலாவின் செங்கல் போன்ற மொபைல் போனி லிருந்து இன்றைய ஆப்பிள் 3ஜி போன், பிளாக் பெர்ரி (Black berry) போன் வரை வளர்ச்சியைக் கொண்ட மொபைல் போனின் வயது சுமார் 27 ஆகிறது.
1983ல் டாக்டர் மார்டின் கூப்பர் 2500 பவுண்ட் விலையில் முதன் முதல் மோட்டாரோலா டைனா ஏ.டி.சி 800 எக்ஸ் என்னும் மொபைல் போனை வர்த்தக ரீதியாகக் கொண்டு வந்தார்.

அப்போதெல்லாம் பெரும் செல்வந்தர்களின் சொகுசு சாதனமாக செல்போன் இருந்து வந்தது. இந்நிலை நீண்ட நாட்களாக இருந்து வந்த போதிலும் அண்மைக்காலமாக அன்றாட வாழ்க்கையின் அத்தியாவசிய சாதனமாக அது மாறிவிட்டது.
மொபைல் போன் முதன் முதலில் வந்து ஓராண்டு கழிந்த பின்னர் உலகில் சுமார் 12 ஆயிரம் பேரே அதன் உபயோகிப்பாளர்களாக இருந்தனர். ஆனால் இன்று அனைத்து நாடுகளிலும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் மட்டும் மொபைல் போனை உபயோகிப் பவர்களின் எண்ணிக்கை 670 மில்லியன் என அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

பேசுவதற்கு மட்டும் வந்த இந்த மொபைல் போன் இன்று டெக்ஸ்ட் மெஸேஜ்களை (எஸ்எம்எஸ்) அனுப்புவதற்கும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பெரிய அளவில் டேட்டா (Data) பரிமாற்றத்திற்காக ஏற்படுத்தப்பட்டதே இன்று 3ஜி மற்றும் இனி வர இருக்கும் 4ஜி மொபைல் சேவைகள் ஆகும். இந்த வேக மாற்றங்கள் இனிவரும் காலங்களில் மொபைல் போனில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்பது கற்பனை கூடசெய்து பண்ணிப் பார்க்க முடியாத நிலையிலுள்ளது.
அல்லாஹ் மனிதனுக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளில் மொபைல் போனும் ஒன்று என்றே சொல்லலாம். இருப்பினும் இவ்வருட் கொடையைப் பயன்படுத்துவதில் இஸ்லாம் காட்டும் வழிமுறைகள் புறக்கணிக்கப்பட்டதால் அது மிகப்பெரும் ஆபத்தாக மாறிவருகிறது. இஸ்லாத்தை தமது வாழ்க்கை திட்டமாக ஏற்று அதனடிப்படையில் வாழ விரும்பும் மக்களுக்கு மொபைல் போன் உபயோகத்தை எவ்வாறு இஸ்லாமிய முறையில் அமைத்துக் கொள்வது என்பதைத் தெளிவு படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கீழே குறிப்பிடப்படுபவை மொபைல் போனைப் பயன்படுத்துவோர் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களாகும்.

1. தொடர்பு கொள்ளும் நேரத்தை கவனத்தில் கொள்ளல்


பொதுவாக இஸ்லாம் பிறருக்கு தொல்லை கொடுப்பதை அனுமதிக்கவில்லை. இந்த வகையில் மொபைல் மூலமாகவும் தொல்லை கொடுப்பது தடை செய்யப்பட்டதே! நாம் தொடர்பு கொள்ளக் கூடிய சகோதரர்கள் நோயாளியாக, பிஸியாக அல்லது ஏதாவது கூட்டங்களில் இருக்கலாம் எனவே அவர்களிடமிருந்து நமது அழைப்புக்கு பதில் வராத சந்தர்ப்பங்களில் அவர்களை மீண்டும் மீண்டும் அழைத்து தொல்லை கொடுக்காமல் இருக்க வேண்டும். அவ்வாறே தூங்கக் கூடிய நேரங்கள், தொழுகை போன்ற வணக்கங்களில் ஈடுபடக் கூடிய சந்தர்ப்பங்களில் பிறரை அழைத்து தொல்லை கொடுப்பது மார்க்கம் அனுமதிக்காத விஷயமாகும்.

2. தொடர்பு கொள்பவரை சங்கடத்தில் ஆழ்த்தாமல் இருப்பது.


தொலைபேசி மூலமாக ஒருவருடன் தொடர்பு கொள்ளக் கூடியவர் ஆரம்பத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதே ஒழுங்காகும். ஒருமுறை ஜாபிர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் இல்லம் சென்று அவர்களை அழைத்த போது, யார்? என்று நபியவர்கள் வினவினார்கள். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள் ‘நான்’ என்று பதில் சொன்னார்கள். அப்போது வெளியே வந்த நபி (ஸல்) அவர்கள் அவர் (பெயர் கூறி தன்னை அடையாளப்படுத்தாமல்) ‘நான்’ என்று கூறியதை கண்டித்தார்கள். (புகாரீ, முஸ்லிம்)

எனவே ஒருவரோடு தொடர்பு கொள்ளும் போது நாம் யார் என்பதை அடையாளப்படுத்துவது அவசியம் என்பது தெளிவாகின்றது. குறிப்பாக, தொலைபேசி மூலமாக பேசும்போது நாம் யார் என்பதை அடையாளப்படுத்தாவிட்டால் தொடர்பு கொண்டவர் கோபத்தில் அழைப்பைத் துண்டிக்க வாய்ப்பிருக்கிறது. சிலர் தொடர்பு கொண்டுவிட்டு மறுதரப்பில் உள்ளவர்களிடம் ‘நீங்கள் யார்?’ என வினவுவது அநாகரீகமான செயலாகும். எனவே தொடர்பு கொண்டவரே தன்னை அறிமுகப் படுத்துவதுதான் தொலைபேசி ஒழுங்கும் இஸ்லாம் கூறும் வழிகாட்டலும் ஆகும். மேலும் தொடர்பு கொள்ளக் கூடிய ஒருவர் மறுதரப்பில் இருந்து பதில் எதுவும் கிடைக்காத போது உடனடியாக தனது மொபைலை ஆஃப் செய்துவிடுவதும் அவரை ஒரு வகையில் சங்கடத்தில் ஆழ்த்தும். எனவே இதுவும் தவிர்க்கப்பட வேண்டியதே!

3. கூட்டங்களில் (மீட்டிங்ஸ்) அதிகமாக மொபைலை பயன்படுத்துவது.


கூட்டங்களில் அமர்ந்திருக்கும் ஒருவர் பிறரோடு தொடர்பு கொள்வதும் தனக்கு வரும் அழைப்புகளுக்கு பதில் தருவதும் நாகரீகமற்ற செயலாகும். அவ்வாறு நடந்து கொள்வது கூட்டத்தில் அமர்ந்திருப்போருக்கும் அதை நடத்து பவருக்கும் தொல்லை தரும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. எனவே மொபைலை உபயோகிப்பவர்கள் இச்செயலை கண்டிப்பாக தவிர்ந்து கொள்ள வேண்டும். மொபைலை ‘ஸைலென்ட் மோடில் வைத்துக் கொள்ளலாம். அல்லது ஆஃப் செய்துவிடலாம். இன்று பெரும்பாலான கூட்டங்களின் ஆரம்பத்தில் இவ்விஷயம் நினைவூட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.

4. பள்ளிவாசலினுள் நுழையும் போது மொபைல் போனை ஆஃப் செய்தல்


தொழுகையில் இறையச்சத்துடனும் உயிரோட்டத்துடனும் ஈடுவது மார்க்கம் வலியுறுத்தியுள்ள விஷயமாகும். எனவே இவ்வாறு பயபக்தியுடன் தொழுது கொண்டிருப்போரையும், அதை வைத்திருப்பவரையும் திசை திருப்பும் அம்சமாக மொபைல் மாறிவிடாமல் இருப்பதற்காக பள்ளிவாசலினுள் நுழையும் போதே அதை ஆஃப் செய்துவிட வேண்டும்.

5. ரிங் டோனாக இசைகளையும், அல்குர்ஆன் வசனங்கள் மற்றும் துஆக்களையும் பயன்படுத்துவது


எனது உம்மத்தில் ஒரு கூட்டம் இருக்கும் அவர்கள் விபச்சாரம், பட்டு, மதுபானம் மற்றும் இசைக்கருவிகளை ஹலாலாக்கிக் கொள்வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி) இசையும் இசைக்கருவிகளும் தடை செய்யப்பட்டவை என்பதில் நான்கு மத்ஹபுடைய இமாம்கள் உட்பட அனைத்து அறிஞர்களும் ஏகோபித்த கருத்தில் உள்ளனர். மேலும் ஸவூதி அரேபியாவின் ஆய்வுக்குழுவும் இசை ஹராம் என தீர்ப்புவழங்கியுள்ளது. எனவே நமது தேவைகளை பரிமாறிக் கொள்வதற்காக நாம் பயன்படுத்தக் கூடிய மொபைல்களில் இவ்வாறான இசைகளை தவிர்ந்து கொள்வது அவசியமாகும்.

ஒருவர் பயன்படுத்தும் ரிங்டோனை வைத்தே அவரது ஆளுமையை புரிந்து கொள்ளலாம். இளைய தலைமுறையினர் மட்டுமன்றி பெரியவர்களும் சில வேளைகளில் மார்க்க ஈடுபாடு கொண்டோரும் இவ்வாறான இசைகளுக்கு அடிமைப்படுவது வேதனை அளிக்கக்கூடிய விஷயமாகும்.
அவ்வாறே சிலர் அல்குர்ஆன் வசனங்கள்,துஆக்கள் மற்றும் அதான் எனும் பாங்கு போன்றவற்றை ரிங் டோனாகப் பயன்படுத்துகின்றனர். இது பற்றி சமகால இஸ்லாமிய அறிஞர்களுள் ஒருவரான அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் அவர்களிடம் வினவப்பட்ட போது, இவற்றை ரிங்டோனாகப் பயன்படுத்துவது அவற்றை இழிவுபடுத்துவதாகவே அமையும் என்று பதிலளித்தார். எனவே, இவ்விஷயத்தில் முஸ்லிம்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.

6. வாகனத்தை ஓட்டும் போது மொபைலை உபயோகிப்பது.


வாகன ஓட்டுனர்கள் வாகனங்களை ஓட்டும் போது மொபைல் போன்களை பயன்படுத்துவது அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. விபத்துக்களில் 28 சதவீதமானவை வாகனங்களை ஓட்டும் போது மொபைல் போன்களில் பேசுவதாலும், எஸ்எம்எஸ் அனுப்புவதாலும் ஏற்படுவதாக ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ இணையதளம் கூறுகிறது. இதனாலேயே பல நாடுகளில் இது ஒரு தண்டனைக்குரிய குற்றமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாத்தில் உயிர்கள் பெறுமதிப்புமிக்கவையாக உள்ளன. பிறர் உயிர்களுக்கு ஆபத்தை உண்டு பண்ணுவதும், தன்னைத்தானே அழித்துக் கொள்வதும் இஸ்லாம் தடைசெய்திருக்கும் பாவங்களாகும். எனவே வாகனங்களை ஓட்டும் போது மொபைல் போனை பயன்படுத்துவதைத் தவிர்ப்பது மார்க்க ரீதியில் கடமை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

7. எஸ்எம்எஸ் (குறுஞ் செய்தி) அனுப்பும் போது பேண வேண்டியவை


மொபைல் போனின் பயன்பாடுகளில் டெக்ஸ்ட் மெஸேஜ் அனுப்புவது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. ஆனால் இதில் மார்க்கமும் ஒழுக்கமும் பேணப்படாமல் பயன்படுத்துவோர் நடந்து கொள்வது வேதனை தரும் அம்சமாகும். ஆபாசமான, விரசமான செய்திகளையும் உறுதிப்படுத் தப்படாத தகவல்களையும் அனுப்புவதும் அடுத்தவர்களின் மனங்களை புண்படுத்தக் கூடிய செய்திகளை பரப்புவதும் இஸ்லாம் தடைசெய்துள்ள பாவங்களாகும்.
‘தான் கேட்கின்ற அனைத்தையும் (உறுதிப் படுத்தாமல்) உடனே அறிவிப்பது ஒருவன் பொய்யன் என்பதற்குப் போதுமான சான்றாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

‘ஈமான் கொண்டவர்கள் மத்தியில் ஆபாசம் பரவ வேண்டுமென விரும்புகிறவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நோவினை தரும் தண்டனை உண்டு’ (24:19) என்று அல்லாஹ் கூறுகின்றான்.

எனவே எஸ்எம்எஸ் அனுப்பும் போது அல்லாஹ் நம்மை பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வு நம்மிடம் இருக்கவேண்டும். மொபைல் போன்களின் மூலமாக ஆபாசத்தையும் அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்புவோர் மறுமையில் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப் படுவார்கள் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

8.மொபைல் போன்கள் மூலமாக முஸ்லிம்களின் குறைகளைத் தேடுவதும் பரப்புவதும் கூடாது


பொதுவாக மனிதர்களின் குறிப்பாக முஸ்லிம்களின் மானம் புனிதமானது என்று இஸ்லாம் கூறுகிறது. ஒரு முஸ்லிமின் குறைகளைத் தேடுவதும் அவனை மானபங்கப்படுத்துவதும் மார்க்கத்தில் கடுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.
‘நாவினால் ஈமான் கொண்டு உள்ளத்தில் ஈமான் நுழையாமல் இருக்கும் மக்களே! முஸ்லிம்களை நோவினை செய்யாதீர்கள்! அவர்களை மானபங்கப்படுத்தாதீர்கள்!
மேலும் அவர்களின் குறைகளைத் தேடாதீர்கள்! யார் தனது சகோதர முஸ்லிமின் குறைகளைத் தேடுகிறாரோ அவரது குறைகளை அல்லாஹ் தேடுவான். மேலும் அவர்களின் உள் வீட்டில் வைத்தேனும் அவர்களை இழிவுபடுத்திவிடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மது, அபூதாவூத், திர்மிதீ)

மொபைல் போன் என்பது தகவல் தொடர்பு வசதிக்காக வந்த ஒரு சாதனமாக இருந்த போதிலும் அதையே வேடிக்கையாகப் பயன்படுத்தும் போக்கு இன்று பலரிடம் வளர்ந்து வருகிறது. மேற்கூறப்பட்ட ஹதீஸில் வந்துள்ள வழிகாட்டல்கள் அனைத்தையும் மறந்து சிலர் செயல்படுவது வேதனை அளிக்கக் கூடியதாகும்.
மொபைல் போன்களில் உள்ள வீடியோ, போட்டோ கேமராக்களை வைத்து அந்நியப் பெண்களை படம் எடுப்பதும் அவற்றை அசிங்கமான முறையில் பயன்படுத்துவதும் தம்முடன் தொடர்பு கொள்வோரின் உரையாடல்களை திருட்டுத்தனமாக பதிவு செய்வதும் இஸ்லாம் தடைசெய்துள்ள மோசமான செயல்களாகும். இதனால் பல விபரீதமான விளைவுகளும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. போன்கள் பழுதடையும்போது அவற்றைத் சரிசெய்வதற்காக டெக்னீஷியனிடம் ஒப்படைக்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். மொபைல் போனிலுள்ள மெமரி கார்டை எடுக்காமல் கொடுத்ததனால் சில பெண்கள் தங்களது கற்புகளை இழந்த நிகழ்வுகளும் உள்ளன.

9. பிள்ளைகள் மொபைல் போன் பயன்படுத்தும் போது அவர்களை கவனிப்பது பெற்றோரின் பொறுப்பு


பிள்ளைகள் பெற்றோரிடம் அமாநிதமாக ஒப்படைக்கப்பட்ட செல்வங்கள். எனவே அவர்களை மார்க்கப்பற்றுடனும் ஒழுக்கத் துடனும் வளர்த்தெடுப்பது பெற்றோரின் கடமையாகும். இதில் கோட்டை விட்டால் அவர்கள் மறுமையில் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள். “நீங்கள் ஒவ்வொருவரும் பராமரிப்பாளர்கள், உங்கள் பராமரிப்புப் பற்றி (மறுமையில்) விசாரிக்கப் படுவீர்கள். ஓர் ஆண் தனது குடும்பத்தைப் பராமரிக்க வேண்டியவன். அதுபற்றி அவன் விசாரிக்கப்படுவான்..” என்று நபி(ஸல்) கூறினார் கள். (புகாரி)
மொபைல் போன் என்பது நல்ல நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர் அதை வேடிக்கைக்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். இதனால் பல மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. இளைஞர்களிடம் ஒழுக்கச் சீர்கேடுகள் வேகமாகப் பரவுகின்றன. அவர்களது கல்வியிலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால்தான் உத்தரப்பிரதேசம் போன்ற சில இடங்களில் திருமணமாகாத பெண்கள் மொபல் போனில் பேசத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர் தேவையில்லாமல் தமது பிள்ளைகளுக்கு மொபைல் போன் வாங்கிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அவர்கள் அதனை வைத்துக் கொள்ள வேண்டுமென்ற? நிலை ஏற்பட்டால் அவர்களை சரியான முறையில் கவனித்து வழிகாட்ட வேண்டும்.

10. மொபைல் போனால் வீண் விரயங்கள் தவிர்க்கப் படல் வேண்டும்.


“உண்ணுங்கள் பருகுங்கள், வீண் விரயம் செய்யாதீர்கள்” என்றும் “வீண் விரயம் செய்யாதீர் நிச்சயமாக வீண் விரயம் செய்வோர் ஷைத்தானின் தோழர்கள் என்றும் அல்குர்ஆன் கூறுகின்றது. மொபைல் போன் உபயோகிப்பாளர்கள் பணம், நேரம் போன்றவற்றை வீண் விரயம் செய்வது பரவலாக உணரப்படுகிறது, எனவே, வீண் விரயம் செய்வது மொபைல் விஷயத்திலும் ஹராம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறே மொபைல் போனை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் உடல் நலத்திற்குரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆக, அல்லாஹ்வின் அருட்கொடைகளில் ஒன்றாக கருதப்படும் மொபைல் போனை இஸ்லாமிய வரையறைகளுக்குள் பயன்படுத்தி நன்மைகளை அடைய முயற்சி செய்வோம்.


- அஷ்ஷேக். முபாரக் மதனி

(நன்றி: சமுதாய ஒற்றுமை மாதஇதழ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.