பாக்தாத்: ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி ரவூப் அப்துல் ரஹ்மானுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மரண தண்டனையை நிறைவேற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈராக்கில் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த சதாம் உசேன் ஆட்சி செய்து வந்தார். அவரது ஆட்சிக்கு எதிராக 2003ஆம் ஆண்டு அமெரிக்கா போர் தொடுத்தது. இந்தப் போருக்கு ஷியா முஸ்லிம்கள், குர்து இன மக்கள் ஆதரவு கொடுத்தனர்.
அத்துடன் சதாமின் பாத் கட்சி தடை செய்யப்பட்டது. பின்னர் பதுங்கு குழி ஒன்றில் மறைந்திருந்த சதாம் உசேன் கைது செய்யப்பட்டார். 2006ஆம் ஆண்டு சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டாவர். சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு எழுதியவர் நீதிபதி ரவூப் அப்துல் ரஹ்மான். அதன் பின்னர் ஈராக்கில் ஷியா முஸ்லிம்கள் ஆட்சி உருவானது. ஆனால் தற்போது ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக சன்னி முஸ்லிம்களும் சதாம் கட்சியினரும் இணைந்து ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற தீவிரவாத அமைப்பாக உருவெடுத்துள்ளனர். தற்போது ஈராக்கின் பெரும்பாலான நகரங்களை அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.
இந்த நிலையில்தான் சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை விதித்த நீதிபதி அப்துல் ரஹ்மானை கைது செய்து அவருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு மரண தண்டனை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இத்தகவலை சதாம் உசேனின் உதவியாளராக இருந்த இப்ராஹிம் அல் தெளரி சமூக வலைதளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். மரண தண்டனை நிறைவேற்ற நீதிபதி, குர்து இனத்தைச் சேர்ந்தவராவார். அதேபோல் ஜோர்டான் நாட்டு எம்.பி. ஒருவரும் இத்தகவலை ஃபேஸ்புக் தளத்தில் உறுதி செய்திருக்கிறார். இருப்பினும் இத்தகவலை ஈராக் அரசு மறுக்கவும் இல்லை.. உறுதிப்படுத்தவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment