தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் போட்டியிட்ட 750 வேட்பாளர்கள் செலவு கணக்குகளை தாக்கல் செய்துள்ளனர். தாக்கல் செய்யாத 95 சுயேச்சைகளுக்கு 3 நாட்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் செலவு கணக்கு
தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் மொத்தம் 845 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை மே மாதம் 16-ந் தேதி நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடிந்த ஒரு மாதத்துக்குள் அனைத்து வேட்பாளர்களும் தங்களுடைய தேர்தல் செலவு கணக்கு விவரங்களை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்திருந்தார். அதன்படி கடந்த 15-ந் தேதி வேட்பாளர்கள் தங்களுடைய தேர்தல் செலவு கணக்கு தொடர்பான விவரங்களை சமர்ப்பிப்பதற்கு கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சென்னையில் உள்ள 3 தொகுதிகள் உள்பட தமிழகத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களுடைய தேர்தல் செலவு கணக்குகளை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பித்தனர்.
வேட்பாளர்கள் சமர்ப்பித்த செலவு கணக்குகளை ஆய்வு செய்வதற்காக தொகுதிக்கு 2 பேர் வீதம் 78 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
தேர்தல் செலவின பார்வையாளர்கள்
அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 39 தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்குகளை ஆய்வு செய்ய 78 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நேற்று தமிழகம் வந்தனர்.
இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் உள்ள மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன், வேட்பாளர்கள் தாக்கல் செய்த தேர்தல் செலவு கணக்குகள் குறித்து ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து சிறப்பு தேர்தல் அதிகாரி சிவஞானம் கூறியதாவது:-
சுயேச்சைகளுக்கு காலஅவகாசம்தமிழகத்தில் கட்சி ரீதியாக போட்டியிட்ட வேட்பாளர்கள் உள்பட 750 வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்துள்ளனர். இந்த கணக்குகள் குறித்து ஆய்வுகள் நடந்து வருகிறது. தாக்கல் செய்யாத 95 சுயேச்சை வேட்பாளர்களுக்கு இன்றிலிருந்து (நேற்று) வரும் 18-ந் தேதி (புதன்கிழமை) வரை 3 நாட்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் தேர்தல் செலவின பார்வையாளர்களை சந்தித்து காலதாமதத்திற்கான விளக்க கடிதத்தை அளித்து, கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அவர்கள் அளிக்கும் கடிதம் ஏற்க கூடியதாக இருந்தால் முறையாக ஏற்கப்படும்.வேட்பாளர்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட தொகையை தாண்டி செலவு செய்திருந்தால் அதுபற்றிய அறிக்கைகள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்படும். தவறான தகவல்களை தெரிவிப்பவர்கள் தகுதி இழப்பு செய்யப்பட்டு 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலையும் ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment