Latest News

குமரியில் சுப. உதயகுமார்- தூத்துக்குடியில் புஷ்பராயன்.. தமிழக ஆம் ஆத்மி வேட்பாளர்கள் அறிவிப்பு!!


டெல்லி: கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக கூடங்குளம் போராட்டக் குழுவைச் சேர்ந்த சுப. உதயகுமார் போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலை முன்னிட்டு கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவின் நிர்வாகிகளான சுப. உதயகுமார் உள்ளிட்டோர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளனர். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் கூடங்குளம் போராட்டக் குழு நிர்வாகிகள் களமிறங்குவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் டெல்லியில் லோக்சபா தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் 7வது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மொத்தம் 26 பேர் கொண்ட இந்த பட்டியலில் தமிழகத்தில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவின் சுப. உதயகுமார். தூத்துக்குடியில் எஸ்.புஷ்பராயன், நெல்லையில் ஜேசுராஜ் போட்டியிடுகின்றனர். அத்துடன் கோவையில் பொன் சந்திரன், ஈரோட்டில் குமாரசாமி, சேலத்தில் சதீஷ் குமார், மத்திய சென்னையில் ஜெ.பிரபாகர், திருப்பூரில் ஆர்.சக்கரவர்த்தி ராஜகோபால கிருஷ்ணன், புதுச்சேரியில் வி.ரங்கராஜன் ஆகியோர் ஆம் ஆத்மி வேட்பாளர்களாக களமிறங்குவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுப. உதயகுமார்

கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் சுப. உதயகுமார் 1959 ஆம் ஆண்டு ஜூன் 8-ந் தேதியன்று நாகர்கோவிலில் பிறந்தார். மதுரை மற்றும் கேரளா பல்கலைக்கழகங்களில் கணிதத்தில் இளங்கலைப் பட்டமும், ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். பின்னர் எத்தியோப்பியா நாட்டில் ஆங்கில ஆசிரியராக ஆறாண்டுகள் பணியாற்றினார். கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் 2000 வரை அமெரிக்காவிலுள்ள நோட்ரே டேம் மற்றும் ஹவாய் பல்கலைக்கழகங்களில் சமாதானக் கல்வியில் முதுகலைப் பட்டமும், அரசியலில் முனைவர் பட்டமும் பெற்றார். சமூக-அரசியல்-பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து பல நூல்களும், கட்டுரைகளும் எழுதியிருக்கும் உதயகுமார் சுமார் 25 நாடுகளுக்குச் சென்று சர்வதேச மாநாடுகளில் பேசியிருக்கிறார்.

பல பல்கலைக்கழகங்களில் கற்பித்திருக்கிறார். தமிழ், ஆங்கிலம், மலையாளம் மொழிகளை சரளமாகப் பேசுவார். இந்தி, அம்ஹாரிக், ஸ்பானிஷ் மொழிகள் ஓரளவு தெரியும். செல்லப் பிராணிகளையும், புத்தகங்களையும், கறுப்புத் தேநீரையும் அதிகம் விரும்பும் உதயகுமார், படிப்பதிலும், எழுதுவதிலும், அணுத் தீமையற்ற உலகை நிறுவுவதிலும் ஆர்வம் கொண்டவர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.