தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் திருவாரூர்–திருத்துறைப்பூண்டி–திருக்குவளை, நாகை–திருத்துப்பூண்டி–பட்டுக்கோட்டை–காரைக்குடி, மன்னார்குடி–பட்டுக்கோட்டை, தஞ்சை–ஒரத்தநாடு–பட்டுக்கோட்டை ஆகிய புதிய ரெயில் பாதை கட்டுமான பணிகள் குறித்த ரெயில்வே நிலைக்குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. ஆய்வு நடத்தினார்.
அப்போது தென்னவன்நாடு பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள், தங்கள் கிராமத்தின் நடுவே அமைக்கப்படவிருக்கும் ரெயில்வே வழித்தட பணிகளால் நூற்றுக்கணக்கான தனியார் கட்டிடங்களும், பொது சொத்துக்களும் சேதம் அடையும் என்பதால் மாற்று வழியாக இந்த திட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட டி.ஆர்.பாலு, அங்கிருந்த அதிகாரிகளை உடனே தென்னவன்நாடு பகுதிக்கு சென்று ரெயில் திட்டத்தின் உத்தேச வரைவினை மாற்றுவதற்குரிய ஏற்பாடுகளை செய்ய முடியுமா? என்பதை அப்பகுதி மக்களிடம் கலந்து பேசி உரிய முடிவை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
அதன்படி அதிகாரிகளும் கிராமமக்களுடன் கலந்து பேசி சரியான வழித்தடத்தை தேர்ந்தெடுத்தனர். ரெயில்வே தடத்தின் இறுதி வரைவு வடிவம் உருவாக்கிட ரெயில்வே துறை சம்மதித்துள்ளது. இதேபோல் பட்டுக்கோட்டை அருகே உள்ள கிறிஸ்தவ ஆலயம் அகற்றப்படாமல் இருக்க ரெயில்வே துறையின் திட்ட வரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்று பட்டுக்கோட்டை நல்லெண்ண அசம்பிளி ஆப் கார்ட் சபையை சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர் ஜேக்கப்செல்வராஜ் தலைமையில் கிறிஸ்தவர்கள் கோரிக்கை வைத்தனர். அதை பரிசீலித்து உரிய முடிவு மேற்கொள்வதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியின்போது ரெயில்வே துறையின் மூத்த அதிகாரிகளும், ஒரத்தநாடு மற்றும் தென்னவன்நாடு பகுதியைச் சேர்ந்த காந்தி, வடிவேல், ராம்குமார், வெங்கடேஸ்வரன், இளங்கோவன், ராகவன், பாலகணேசன், சுகுமாறன், குமார், கலியபெருமாள், ஆடிட்டர் ராமையன், ரெங்கராஜ், முருகேசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தர்மலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை ரெயில்வே நிலைக்குழு தலைவர் டி.ஆர்.பாலுவிடம் அளித்தனர்.
நன்றி : தினத்தந்தி : நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment