பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட கையெழுத்து போட்டு கொடுத்து சர்ச்சையில் சிக்கிய நாகர்கோவில் தொகுதி நாடாளுமன்ற திமுக உறுப்பினர் ஹெலன் டேவிட்சனுக்கு எதிராக குமரி மாவட்டத்தில் சிறுபான்மையினரிடையே எதிர்ப்பு வலுத்து வருகிறது.
அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவாக பொதுமக்கள், அரசியல்வாதிகள் முதலானோரிடமிருந்து கையெழுத்து பெற்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க, குமரி மாவட்ட பாஜக கையெழுத்து வேட்டை நடத்தி வருகிறது. இதன் ஆரம்பமாக, நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதி திமுக உறுப்பினர் ஹெலன் டேவிட்சனைச் சந்தித்து கையெழுத்து கேட்டுள்ளனர். ஹெலன் டேவிட்சனும் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் கையெழுத்திட்டுக் கொடுத்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, திமுகவுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.
விஷயம் திமுக தலைமைக்குக் கிடைத்த உடன், ஹெல்ன் டேவிட்சனிடம் திமுக தலைமை விளக்கம் கேட்டது. உடன், "ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவாகத் தான் கையெழுத்திடவில்லை எனவும் தொகுதி எம்பி என்ற முறையில் தன்னிடம் கொடுக்கப்பட்ட மனுவைப் பெற்றுக்கொண்டதற்கான ஒப்புதல் கையெழுத்தே தான் போட்டுக்கொடுத்ததாகவும்" ஹெலன் டேவிட்சன் மறுப்பு வெளியிட்டார். தொடர்ந்து குமரி மாவட்ட பாஜக தலைவர்களுள் ஒருவரான பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் வேலாயுதனும் ஹெலன் டேவிட்சன் கூறியது தான் சரி; அவர் ராமர் கோவில் கட்ட கையெழுத்து ஏதும் இடவில்லை என்று மறுப்பு வெளியிட்டார்.
ஹெலன் மூலமாக மறுப்பறிக்கை வெளியிட்டு, பிரச்சனையிலிருந்து தப்பி விடலாம் எனக் கணக்குபோட்ட திமுக தலைமைக்குப் பெரும் தலைவலி தரும் வகையில், தற்போது ஹெலன் டேவிட்சன் எம்பிக்கு எதிராக குமரி மாவட்ட சிறுபான்மை மக்களிடையே எதிர்ப்பு வலுக்க ஆரம்பித்துள்ளது. மாவட்டம் முழுவதும் அவருக்கு எதிராக கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அத்துடன் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்னிலையில் ஹெலன் டேவிட்சனைப் பதவி விலகக் கோரி முற்றுகை போராட்டம் நடத்தவும் சில சிறுபான்மை அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
நன்றி: இந்நேரம்.காம்
No comments:
Post a Comment