இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் உச்சிப்புள்ளியை அடுத்துள்ள பெருங்குளம் கிராமத்தை சார்ந்தவர் மகேஸ்வரன். இவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், கடலூர் மாவட்டத்தை சார்ந்த சத்திய ப்ரியா (வயது 21) என்ற பெண்மணிக்கும் இடையே கடந்த 2 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது சத்திய பிரியா 9 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். சத்திய பிரியாவின் மாமியார், இன்று பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். பரிசோதனை முடிந்து ஊருக்கு திரும்பி, பெருங்குளம் பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளனர்.
அந்த சமயத்தில், பலத்த மழை பெய்து வந்ததால், மின்தடை ஏற்பட்டு இருந்துள்ளது. பின்னர் இருவரும் சாலையை கடக்க முயற்சி செய்கையில், சாலையில் வந்த கார் இவர்களின் மீது மோதியுள்ளது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளனர்.

இவர்களை மீட்ட அப்பகுதி மக்கள், இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யவே, மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு சத்திய பிரியா சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார். இவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட நிலையில், சத்திய பிரியாவின் வயிற்றில் இருந்த சிசுவும் இறந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலையை கடக்கும் போது எந்த விதமான அவசரமும் இல்லாமல் பாதுகாப்பாக கடக்க வேண்டும். அலட்சியமாக பேருந்தில் இருந்து இறங்கியதும் பேருந்தை ஒட்டியவாறு முன்புறம் வழியாகவோ அல்லது பேருந்தின் பின்புறத்தில் இருந்து பேருந்து நிற்கும் போதே சாலையை கடக்க சாதாரணமானவர்களும் முயற்சிக்க வேண்டாம். நமது செயல்களில் உள்ள சிறு அலட்சியம் மற்றும் அஜாக்கிரதை, அலட்சிய நம்பிக்கை பெரும் சோகத்தை நமது குடும்பத்தினருக்கு கொடுக்க வாய்ப்புள்ளது என்பதை புரிந்து செயல்பட வேண்டும்.

No comments:
Post a Comment