Latest News

  

குடியுரிமை சட்டத் திருத்தம் அனைத்து மக்களுக்கும் பேராபத்து: பழ. நெடுமாறன்

தஞ்சாவூர்: குடியுரிமை திருத்தச் சட்டம் அனைத்து மக்களுக்கும் பேராபத்தை விளைவிக்கும் என தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தஞ்சாவூர் ஆட்டுமந்தை தெரு அத்தர் பள்ளிவாசல் முன், தொடர்ந்து எட்டாவது நாளாக தொடர் முழக்கப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், இரவில் பங்கேற்ற நெடுமாறன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
"இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய அத்தனையும் அரசியல் சட்டத்துக்கு எதிரானது. நாட்டு மக்களுக்கு எத்தனையோ பிரச்னைகள் இருக்கின்றன. ஆனால், அந்த முக்கியமான மக்கள் பிரச்னைகளை பற்றி மத்திய அரசு கவலைப்படாமல், இந்த நேரத்தில் நாட்டு மக்களைப் பிளவுபடுத்துகிற வகையில் இப்படியொரு சட்டத்தைக் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன?
இது, முஸ்லீம்களுக்கு மட்டும் எதிரான சட்டமல்ல. ஒட்டுமொத்தமாக ஏழை, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் அத்தனை பேருக்கும் இச்சட்டத்தின் மூலம் பேரபாய விளைவு இருக்கிறது.

குடிமக்கள் கணக்கெடுப்பு என்பது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், இந்த முறை கேட்கப்படாத சில கேள்விகளைக் கேட்கின்றனர்.

பெற்றோரின் பெயர், பிறப்புச் சான்றிதழ் போன்றவை கேட்கப்படுகின்றன.
கிராமப்புறங்களில் அக்காலத்தில் கிராம மருத்துவச்சிகளிடமே பிரசவம் பார்க்கப்பட்டது. அவர்களிடம் எப்படி சான்றிதழ் வாங்க முடியும். எனவே, சரியான சான்றிதழ் கொடுக்க முடியாது.

எனவே, அச்சூழ்நிலையில் உள்ளவர்கள் தனியாக ஒரு பதிவேட்டில் பதிவு செய்யப்படுவர். அவர்கள் குடியுரிமையைச் சட்டப்பூர்வமாக நிலைநாட்ட வேண்டும் என வற்புறுத்தப்படுவர். இல்லையென்றால் சிறப்பு முகாம்கள் அல்லது சிறைகளுக்கு அனுப்பப்படுவர்" என்றார் நெடுமாறன்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.