
பள்ளியில் வைத்து ஆசிரியையை அவரின் கணவர் கத்தியால் குத்தி கொலை செய்திருக்கும் சம்பவமானது மதுரை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அரசு உதவி பெற்ற பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த ரதிதேவி என்ற ஆசிரியை பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த குருமுனீஸ்வரன் என்பவரை திருமணம் புரிந்தார்.
திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வந்தன. இதனால் 2 பேரும் ஓராண்டாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். வழக்கம் போல ரதிதேவி தன் பள்ளியில் பாடம் எடுத்து கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் ரதிதேவியின் வகுப்பறையுள் குருமுனீஸ்வரன் புகுந்துள்ளார்.
பாடம் எடுத்து கொண்டிருந்த ரதிதேவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்திற்கு மேல் வாக்குவாதம் வெடிக்க தொடங்கியது. ஆத்திரமடைந்த குருமுனீஸ்வரன் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரதிதேவியின் சரமாரியாக குத்தியுள்ளார். சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் ரதிதேவி உயிரிழந்தார்.
இதனை அறிந்த பள்ளி நிர்வாகத்தினர் அப்பகுதி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ரதிதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கொலைக்கு காரணமான குருமுனீஸ்வரன் தலைமறைவானதால் காவல்துறையினர் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் குருமுனிஸ்வரன் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது மதுரை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment