Latest News

சென்னைக்கு ரயிலில் குடிநீர் எடுத்து வருவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள்.! அரசின் அறிவிப்பு நிறைவேறுமா?


தலைநகர் சென்னைக்கு ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வருதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதால், முதல்வர் பழனிசாமி அறிவித்த திட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேட்டூர் கூட்டு குடிநீர் திட்டத்தின்படி வேலூர் மாவட்டம் மேட்டுசக்கரகுப்பத்தில் உள்ள நீரேற்று நிலையத்தில் இருந்து, தண்ணீர் எடுத்து ரயில் மூலம் தலைநகர் சென்னைக்கு கொண்டு வருவதே தமிழக அரசின் திட்டம்.
ஆனால் மேட்டுசக்கரகுப்பத்தில் இருந்து ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வர, 5 கிமீ தூரத்திற்கு ராட்சத குழாய்கள் பதிக்க வேண்டும் என்பதால் முதல்வர் அறிவித்துள்ள திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்படும் என தெரிகிறது.
இது பற்றி கருத்து தெரிவித்துள்ள மக்கள், 19 வருடங்களுக்கு முன் இதே போல ஒரு பெரிய பஞ்சம் ஏற்பட்டது. அப்போது மேல்பட்டி பாலாற்றிலிருந்து நேரடியாக தண்ணீர் எடுத்து வந்து, பம்ப் செய்து சென்னைக்கு தண்ணீர் எடுத்து செல்லப்பட்டதை நினைவு கூர்ந்துள்ளனர்.
அன்றைய சூழலில் பாலாற்றை சுற்றிலும் பெரிய அளவில் தண்ணீர் ஓடியது. பாலாற்றை சுற்றியிருக்கிற ஆம்பூர், மேல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்த ஏரிகள், குளங்கள், குட்டைகள் என எல்லா நீர் ஆதாரங்களிலும் தண்ணீர் தாராளமாக இருந்தது.
ஆனால் தற்போதோ நிலைமை வேறு. பாலாற்றில் சுத்தமாக தண்ணீர் இல்லை, வெறும் மணல் மட்டுமே உள்ளது. மேலும் அருகிலுள்ள நீர் ஆதாரங்கள் முற்றிலும் வறண்டு தான் காணப்படுகிறது.
இதனால் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு போவதற்கான சாத்தியக்கூறுகளும் தற்போது குறைவாகவே உள்ளது. அதே போல மேட்டுசக்கரகுப்பத்திலிருந்து, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் உள்ள தண்ணீரை கொண்டு வந்து, பின்னர் ரயில் மூலம் சென்னைக்கு எடுத்து செல்ல வேண்டுமென்றால் அதற்கே ஒருமாதத்திற்கு மேல் ஆகிவிடும் என குறிப்பிட்டுள்ளனர்.
இடையில் 3 மிகப்பெரிய ரயில்வே டிராக் இருப்பதால், பைப் லைன் போட்டு ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட வேண்டும். இதற்கு மத்திய அரசின் உதவியை தமிழக அரசு நாட வேண்டும். மத்திய அரசு இதற்கு அனுமதி கொடுக்க வேண்டும்.

பைப் லைன் போடுவதற்கு அனுமதி கிடைத்தால் கூட சில நாட்களுக்கு ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும். இவ்வளவு பிரச்சனைகளை தாண்டி தான் நீர் கொண்டு செல்ல குழாய் பாதை அமைக்க முடியும் என கூறுகின்றனர் மக்கள்.
ஜோலார்பேட்டை பகுதியிலேயே தண்ணீர் பஞ்சம் பெரியளவில் இருக்கிற போது, சென்னைக்கு 1 லட்சம் கோடி லிட்டர் தண்ணீரை எடுத்து செல்ல திட்டமிட்டுள்ளனர். சென்னை மக்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வது பற்றி தங்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் அரசு எடுத்து செல்ல திட்டமிட்டுள்ள அளவு இங்கு தண்ணீர் இல்லை என்பதே நிலவரம் என்று, ஜோலார்பேட்டை சுற்றுவட்டார மக்கள் கூறியுள்ளனர்
கடந்த 2001-ம் ஆண்டு சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்ட போது, ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது அப்போது பாலாற்றில் ஆழ்துறை கிணறுகள் அமைக்கப்பட்டு தண்ணீர் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய சூழலில் பாலாற்றில் தண்ணீர் எடுப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றே வேலூர் மாவட்ட மக்கள் கூறுகின்றனர்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.