Latest News

  

தேர்தல் முடியும்வரை கூட்டுறவுச் சங்க ஊழியர்களுக்குத் துப்பாக்கிக் கொடுங்கள்'- கொந்தளிக்கும் அரசு ஊழியர்கள்

எம்.எல்.ஏ-க்கள் தாக்குதலைக் கண்டித்து கன்னியாகுமரியில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ``கூட்டுறவுச் சங்கத் தேர்தல் முடியும் வரை கூட்டுறவுச் சங்க ஊழியர்களுக்குத் துப்பாக்கிக் கொடுங்கள்'' என ஆவேசமாகப் பேசினர்.

கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் முறைகேடு நடப்பதாகக் கூறி கன்னியாகுமரி மாவட்டத்தின் ஆறு எம்.எல்.ஏ-க்களும் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கிருந்த ஜூனியர் அசிஸ்டன்ட் சுபாஷ் தாக்கப்பட்டார். இந்தத் தாக்குதலைக் கண்டித்தும், ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எனப் பாராமல் அனைத்து அரசியல்வாதிகள் மீதும் கோபம் கொப்பளிக்கப் பேசினார்கள் அரசு ஊழியர்சங்க நிர்வாகிகள் 

நகராட்சி ஊழியர்கள் சங்க மாநிலத் துணைத்தலைவர் லீடன்ஸ்டோன் பேசுகையில், சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. அரசு ஊழியர்களைத் தாக்குவது தொடர்ந்து நடந்து வருகிறது. ஏற்கெனவே எஸ்.எம்.ஆர்.வி. ஸ்கூல் மற்றும் ரயில்வே ஸ்டேஷன் பகுதிகளில் அரசு ஊழியர்களைத் தாக்கியிருக்கிறார். ராஜாக்கமங்கலத்தில் ஒரு இன்ஸ்பெக்டரைத் தாக்கியிருக்கிறார். நாகர்கோவில் நகராட்சியில் ஒரு பொறியாளரை மிகவும் கீழ்த்தரமாகப் பேசினார். இன்று கூட்டுறவுத்துறை ஊழியர்களின் பிரச்னையில் மறைமுகமாகத் தாக்குதல்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் தாக்குதல் நடக்கும்போது போலீஸ் அதிகாரி அருகிலேயே இருந்தார். எனவே, விசாரணைக்காகக் காலம் தாழ்த்தாமல் உடனடியாக எம்.எல்.ஏவைக் கைதுசெய்ய வேண்டும். இது எதிர்க்கட்சிகளுக்கு மட்டும் அல்ல ஆளும்கட்சியினருக்கும் பொருந்தும். எந்தக் கூட்டுறவுச் சங்கங்களில் எல்லாம் தேர்தல் நடக்கிறதோ அங்கெல்லாம், எங்க ஆளுங்க பெயரை ஒட்டுங்க' என ஆளும் கட்சியினர் சொல்கிறார்கள். வருவாய்த்துறை ஊழியர்கள் தேர்தல் பணியாற்றுகிறபோது துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்கிறாரோ, அதுபோல கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்காமல் இருந்தால் கூட்டுறவுச் சங்க தேர்தல் முடியும் வரை கூட்டுறவுச் சங்க ஊழியர்களுக்குத் துப்பாக்கிக் கொடுங்கள். தேர்தல் பணி செய்யும் கூட்டுறவுப் பணியாளர்களுக்குத் தமிழக அரசு துப்பாக்கி வழங்க வேண்டும். இவர்களைக் கைதுசெய்யும்வரை தமிழகம்.முழுவதும் போராட்டம் நடத்துவோம்" என்றார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.