தமிழ்நாட்டுலேயே ரொம்ப ஈஸியான வேலை இப்போ கட்சி ஆரம்பிக்கிறதுதான்
போல... அதிலும் சாயங்காலம் ஆறு மணி ஆனால் டிவி கேமராமேன்கள் அம்மா
நினைவிடத்துக்குப் படையெடுத்து விடுகிறார்கள். இன்னிக்கு யாரு வந்து
உட்கார்ந்து தியானம் பண்ணப்போறாங்கன்னு தெரியலையே என்று புலம்புகின்றனர்
நைட் ட்யூட்டி பார்க்கும் மீடியா ரிப்போர்ட்டர்ஸ்.
தான் உயிரோடு இருந்தவரை சொந்தக் கட்சியினரைப் பேசக் கூட நடுங்கும் நிலையில்
வைத்திருந்தார் ஜெயலலிதா. ஆனால் அவரது மறைவுக்கு பின் அவரது சமாதியிலேயே
வாரத்துக்கு ஒருவர் வந்து அதிமுகவை உடைத்து கட்சி தொடங்குவார்கள் என்பதை
நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். ஒருவேளை இப்போது நடப்பதெல்லாம்
ஜெயலலிதா ஆன்மாவுக்கு உண்மையிலேயே தெரிய வந்தால் அதுவே குழி தோண்டி உடலை
எடுத்துக்கொண்டு போய் கண்ணம்மாபேட்டையில் புதைத்துக் கொள்ளும்.
இதில் இந்த வார வரவு தீபாவின் கணவர் மாதவன். தீபா யாருன்னே இன்னும்
பாதி அதிமுககாரர்களுக்குத் தெரியாது. இதில் தீபாவின் கணவர் வந்து கட்சி
தொடங்குகிறார். இதுதான் தமிழனுக்கு வந்த சோதனை...
தமிழனுக்கு எப்போதுமே இட்லி இல்லனா தோசை என்றே முடிவெடுத்து பழக்கம்.
உதாரணத்துக்கு திமுக இல்லைனா அதிமுக, அதிமுக ஆட்சி சரியில்லைனா திமுக,
கருணநிதி சரியில்லைனா எம்ஜிஆர், ஜானகி பிடிக்கலைனா ஜெயலலிதா இப்படித்தான்
மாற்றி மாற்றி குத்துவார்கள்.
அதாவது ஹோட்டலுக்குள் நுழைவதற்கு முன் பூரி
சாப்பிட வேண்டும், மசாலா தோசை சாப்பிட வேண்டும், ஆனியன் ரவா சாப்பிட
வேண்டும் என்று நினைக்கும் நம்ம ஆள், உள்ளே அமர்ந்த உடன் அதே இட்லி,
தோசையைத்தான் ஆர்டர் பண்ணுவான்.
இது சைக்காலஜி. இந்த சைக்காலஜியை நன்றாகப்
புரிந்து வைத்திருந்ததால்தான் தமிழனை ஜெயலலிதாவும் கருணாநிதியும் மாற்றி
மாற்றி ஏமாற்ற முடிந்தது. ஆனால் இப்போது நடக்கும் கூத்துகள், இரண்டு
பேரையும் தேவலாம் என சொல்ல வைக்கிறது. சரி, தீபா மேட்டருக்கு போவோம்...
நாம் சொன்ன சைக்காலஜிபடி உருவானவர் தான் தீபா. ஜெயலலிதா இறப்புக்கு பின்னர்
சசிகலாவை வெறுப்பதற்காக அதிமுககாரர்களால் கையில் எடுக்கப்பட்டார் தீபா.
ஜெயலலிதா ஜெயிலுக்கு போனதில் இருந்து 75 நாட்கள் அப்போலோ அரெஸ்டில்
இருந்தது வரை எட்டிக்கூடப் பார்க்காத தீபா, ஜெயலலிதா உயிரை விட்ட பிறகு
லைட்டாக எட்டிப் பார்த்தார். பின்னர் மீண்டும் உள்ளேயே புகுந்துகொண்டார்.
அத்தை மரணத்தில் மர்மமில்லை என்றும் சொல்லி விட்டார். அவரது செயல்பாடுகள்
ஏதோ பேரத்துக்குக் காத்திருப்பது போலத்தான் தெரிந்தன.
ஒரு கட்டத்துக்குப் பிறகு ஊரில் இருக்கும் தொண்டர்கள் எல்லாம்
கும்பகர்ணனின் தூக்கத்தைக் கலைப்பதை போல ஃப்ளெக்ஸ் பேனர்கள் வைத்து தீபாவை
தட்டி எழுப்பினார்கள்.
வீட்டை விட்டு நகராமலேயே வாரா வாரம் பால்கனி
தரிசனம், தினமும் ஒரு அறிக்கை, விரைவில் தமிழ்நாடு முழுக்க சுற்றுப் பயணம்,
கட்சி ஆரம்பிக்க போறேன் என்று மீடியாவையும் கட்சித்தொண்டர்களையும்
குத்தகைக்கு எடுத்தார் தீபா.
ஒரு பக்கம் தொண்டர்கள் வீட்டு வாசலில் குவிய குவிய உள்ளிருந்த தீபாவின்
காமெடி சேட்டைகள் அதிகமானது. மாதத்துக்கு ஒரு நாள் வரும் சம்பளத்துக்காக
மாதம் முழுக்க காத்திருப்பவன் போல காத்திருக்க ஆரம்பித்த தொண்டன் ஒரு
கட்டத்தில் கடுப்பாக ஆரம்பித்தான்.
எல்லாம் ஓபிஎஸ் தியானம் தொடங்கும் வரைதான். மெரினாவில் ஓபிஎஸ் உட்கார்ந்த
அடுத்த நிமிடமே தீபாவை பொத்தென்று போட்டுவிட்டு ஓபிஎஸ் பக்கம் ஓடினார்கள்
அதிமுக தொண்டர்கள்.
ஓபிஎஸ்சின் செல்வாக்கு கூடியதை அறிந்த தீபா,
ஓபிஎஸ்சிடம் ஒரு சந்திப்பு போட்டார். அதில் தீபா, 'முதல்வர் பதவியும்
பொதுசெயலாளர் பதவியும் எனக்கு வேண்டும். அம்மா உங்களுக்கு அளித்த அடிமைப்
பதவியை மட்டும் உங்களுக்கே தருகிறேன்' என்று சொல்ல ஓபிஎஸ் மயக்கம் போட்டு
விழாத குறை ஆனார்.
'அய்யய்யோ.. ரொம்ப லேட்டாக்கிட்டோமோ' என்று ஆற அமர எழுந்த தீபா ஜெயலலிதா
பிறந்தநாள் அன்று ஒரு கட்சியைத் தொடங்கினார்.
'எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை' என்ற ஒரு அதிசயப் பெயர், தொடங்கியவர்
பொருளாளர் பதவியை மட்டும் வைத்துக்கொண்ட மர்மம், ஆரம்பித்த அடுத்த நாளே
செயலாளர் மீது லஞ்சப்புகார், அதற்கும் அடுத்த நாள் செயலாளர் நீக்கம் என்று
ஜெட் வேகத்தில் போன தீபாவின் பேரவையில் அடுத்ததாக கோஷ்டி பிரச்னை
கிளம்பியது.
கட்சி பிரச்னை குடும்ப பிரச்னையாக உருவெடுத்து தீபாவின் மண
வாழ்க்கைக்கே வேட்டு வைத்திருப்பதுதான் இதுவரை எந்த அரசியல் கட்சியும்
காணாத ஒன்று. கட்சிக்கு நிர்வாகிகள் நியமிப்பதில் தொடங்கிய சண்டை கணவன்
மனைவி இருவரும் பிரியும் அளவுக்கே சென்று விட்டது.
'எந்த நேரத்தில் தீபாவை அம்மாவாக்குவோம்னு போஸ்டர் அடிச்சானுகளோ தெரியலை..
அரசியலுக்கு ஆசைப்பட்டு, 'உண்மையிலேயே அம்மா'வாகப் போற நேரத்துல கணவரை
பிரிஞ்சு தனியாளா நிக்குது இந்த தீபா... இந்த பாவம் உங்களை சும்மா விடாது
மை சன்ஸ்!
- க.ராஜீவ் காந்தி
No comments:
Post a Comment