Latest News

உள்ளாட்சி தேர்தல்... அதிமுக, திமுகவில் வேட்பாளர்கள் தேர்வு மும்முரம்... யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கு?

 
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், முழு பலத்துடன் திமுகவும், அதிமுகவும் களமிறங்குவதால் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பாளர்கள் தேர்வில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்ளாட்சித் தேர்தலை அக்டோபர் 24க்குள் நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் பணியாளர் மற்றும் அதிகாரிகள் நியமனம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுக்கு, 10 கட்டளைகளை, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. அரசியல் கட்சியினரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் வேட்பாளர்கள் அதிமுகவில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் நேர்காணல் நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதிமுக ஆளும்கட்சியாக இருப்பதால் கவுன்சிலர், தலைவர் பதவிகளுக்கு வர அக்கட்சி நிர்வாகிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நம்பிக்கையான வேட்பாளர்கள் அதிமுக சார்பில் மாவட்ட வாரியாக உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடிந்த நிலையில் வேட்பாளரை அடையாளம் காணும் பணி நடக்கிறது. இந்த முறை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களை வெற்றி பெறும் கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்க உள்ளதால் தலைவர் தேர்தலில் திரைமறைவு குதிரைபேரம் நடக்கலாம். அதனால், நம்பிக்கைக்கு உரிய கட்சி விசுவாசிகளை மட்டுமே வேட்பாளராக்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது.

வேட்பாளர்கள் தேர்வு தற்போது முதற்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவதற்கு ஒவ்வொரு வார்டுக்கும் 3 ஆண்கள், ஒரு பெண் என 4 பேர் கொண்ட உத்தேச வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது . இதில் இருந்து 2 பேரை இறுதி செய்து, அந்த பட்டியலை கட்சித் தலைமைக்கு அனுப்பி வைக்க மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


நம்பிக்கையான நபர் அந்த பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கியதும் வார்டு வாரியாக பட்டியலில் இடம்பெற்ற 2 பேருக்கு அந்தந்த மாவட்டங்களில் நேர்காணல் நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. இதில் இருந்து ஒருவரை வேட்பாளராக தேர்வு செய்து அவருக்கு கட்சி சார்பில் போட்டியிட விண்ணப்பம் வழங்கவும், இரண்டாவது நபரை பரிசீலனைக்கு உரியவராக காத்திருப்போர் பட்டியலில் வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் வேட்பாளர் நீக்கப்பட்டால் அடுத்தவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

திமுகவும் பலமான போட்டி சட்டசபைத் தேர்தலில் கணிசமான இடங்களை கைப்பற்றி பலமான எதிர்கட்சியாக திமுக உருவெடுத்துள்ளதால் உள்ளாட்சித் தேர்தலில் அதிகமான இடங்களில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை அக்கட்சியினருக்கு ஏற்பட்டுள்ளது. திமுகவில் மாநகராட்சி, நகராட்சி, ஒன்றியம், பேரூராட்சி வாரியாக உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடக்கத் தொடங்கியுள்ளதால் கட்சி நிர்வாகிகளிடையே சீட் பெறுவதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

அன்பழகன் அறிவிப்பு உள்ளாட்சி தேர்தல் குறித்து சென்னை மாவட்ட திமுக பகுதி, வட்ட செயலாளர்களுக்கான அறிவிப்பை பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ளார். அதில், நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலையொட்டி சென்னை வடக்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தெற்கு ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட பகுதி செயலாளர்கள் வட்ட செயலாளர்கள் இது வரை நடந்த திமுக நிகழ்ச்சிகள், அண்ணா, திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் நிகழ்ச்சிகள், செயல்வீரர்கள் கூட்டம், பிரசார பொதுக் கூட்டம் ஆகியவற்றைப் பற்றிய மினிட் புத்தகம் நகல் சமர்பிக்க வேண்டும்.


முழு பலத்துடன் களமிறங்கும் கட்சிகள் செப்டம்பர் 12ம் தேதி - சென்னை வடக்கு, 13ம் தேதி - சென்னை கிழக்கு, 14ம் தேதி - சென்னை மேற்கு, 16ம் தேதி - சென்னை தெற்கு மாவட்டங்களுக்கு ஆய்வு நடைபெறும். நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலின் போது ஆற்றிய பணிகள் குறித்து பதிவு செய்துள்ள மினிட் புத்தகத்தை நகல் எடுத்து அசல், நகல் ஆகிய இரண்டையும் ஆய்வு நடைபெறும் தேதிகளில் சம்பந்தப்பட்டவர்கள் நேரில் வந்து திமுக அமைப்பு செயலாளரிடம் நகல் புத்தகத்தை தந்து விட்டு அசல் மினிட் புத்தகத்தில் ஆய்வு செய்ததற்கான ஒப்புதல் கையெழுத்தை அமைப்பு செயலாளரிடம் பெற வேண்டும் என்று கூறியுள்ளார் அன்பழகன். அதிர்ஷ்டம் யாருக்கு வேட்பாளர்கள் தேர்வில் இரு கட்சியினரும் தீவிர கவனம் செலுத்துவதால், இம்முறை கட்சி விசுவாசிகளுக்கு மட்டுமே சீட் கிடைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு முழு பலத்துடன் திமுகவும், அதிமுகவும் களமிறங்குவதால் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.