Latest News

ஒலிம்பிக் பார்த்த பிறகுமா இந்தியாவில் பெண் சிசு கலைப்பு நடக்கும்? கேட்டாரு பாருங்க நச்சுன்னு கேள்வி


இந்தியா சார்பில் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகப்படியான வீரர்-வீராங்கனைகள் இம்முறைதான் ஒலிம்பிக்கிற்கு சென்றனர். 120 பேரை அனுப்பி வைத்தும் பதக்கம் வெல்லப்படாததை பார்த்து, வெறுத்துப்போய், இது தெண்டச்செலவு என கமெண்ட் அடித்தார் எழுத்தாளர் ஷோபா டே. ஆடி மாதம் என்பதால்தான், தங்கம் வாங்குவது குடும்பத்துக்கு ஆகாது என நமது வீரர்கள் நினைக்கிறார்கள் என்று கேலி செய்தனர் சமூக வலைஞர்கள். இப்படி ஒலிம்பிக்கே வெறுத்துப்போன நிலையில்தான், போட்டித் தொடருக்கே உயிர் கொடுத்தார் 23 வயது தீபா கர்மகர்.

அதுவரை விமர்சனத்திற்கு திறந்த வாய்கள், ஜிம்னாஸ்டிக்கில் இவர் அடித்த பல்டிகளை பார்த்து திறந்தபடியே இருந்தன. தங்கத்தை எட்டுவார் அல்லது பதக்கம் நிச்சயம் என பந்தையம் கட்டினர் ரசிகர்கள். ஆனால் நூலிழையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டு 4வது இடத்தை பிடித்தார் தீபா கர்மகர். ஆனாலும், ஜிம்னாஸ்டிக் போன்ற ஒரு பிரிவில் இந்திய வீராங்கனையின் உச்சகட்ட சாதனை இது. எதிர்பார்க்காத நேரத்தில், இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை மல்யுத்தத்தில் வென்று அதகளம் செய்தார் 23 வயதான சாக்‌ஷி மலிக். அப்பாடா, என இந்தியர்கள் விட்ட பெருமூச்சு, ரியோ டி ஜெனிரோவரை வீசியிருந்தாலும் ஆச்சரியமில்லை. அப்படி ஒரு நிம்மதி. அந்த நேரத்தில்தான், ரசிகர்களை சீட் நுனிக்கு வரவைத்தார் சிந்து. நேற்று இரவு பேட்மின்டன் போட்டியில், முதல் முறையாக இந்தியா வெள்ளிப்பதக்கம் வென்றது. அந்தச் சாதனையை நிகழ்த்திக் காட்டினார் பி.வி.சிந்து. ரேங்கிங்கில் பத்தாவது இடத்தில் இருக்கும் 21 வயது பி.வி.சிந்து முதல் செட்டில், உலகின் நம்பர்-1 வீராங்கனையான ஸ்பெயின் மரினாவை வீழ்த்தி அசத்தினார். அடுத்தடுத்த கேம்களை மரின் கைப்பற்றியதால் சிந்துவிற்கு கிடைத்தது வெள்ளி. அடுத்ததாக இந்தியா அதிகம் எதிர்பார்ப்பது, கோல்ப் வீராங்கனை அதிதி அசோக்கிடமிருந்துதான். இப்படியாக வென்றவர்களும், வெல்லுவார்கள் என எதிர்பார்க்கப்படுபவர்களும் பெண்கள்தானே தவிர, மருந்துக்கு கூட ஒரு ஆணும் இல்லை. இந்திய கொடியை உயர்த்தி பிடித்து அணிவகுப்பில் பங்கேற்ற அபினவ் பிந்த்ராவும் ஏமாற்றவே செய்தார். லியாண்டர் பயஸ், போபண்ணா என எல்லோரும் இந்திய பதக்க கனவை கலையோ கலை என கலைத்துப்போட்டனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், ஜான்சி ராணி, ராணி மங்கம்மாள் போன்றோர் பிறந்த மண்ணை சேர்ந்த, மகளிரின் சக்தி என்ன என்பதை நிரூபித்துக்காட்டி நாட்டின் மானத்தை காத்துள்ளனர் இந்த வீர மங்கைகள்.

இதனால்தான், கிரிக்கெட் வீரர் சேவாக் தனது டிவிட்டில், பெண் குழந்தைகளை கொல்லாமல் (கருக்கலைப்பு) விடுவதால் எப்படிப்பட்ட நன்மை கிடைக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம். கஷ்ட காலத்தில் நமது பெருமையை பெண்கள் காப்பார்கள் என்று கூறினார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.