Latest News

வழக்கறிஞர்களுக்கு எதிரான புதிய சட்டத் திருத்தம் நிறுத்தி வைப்பு


வழக்கறிஞர்களுக்கு எதிரான புதிய சட்டத் திருத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல் அறிவித்துள்ளார். ஆனால், 126 வழக்கறிஞர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று வழக்கறிஞர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மே மாதம் வழக்கறிஞர்கள் சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன்படி, குடிபோதையில் நீதிமன்றத்துக்கு வருவது, நீதிபதிகளின் பெயரைச் சொல்லி கட்சிக்காரர்களிடம் பணம் வாங்குவது, நீதிபதியை மிரட்டும் விதமாக உரத்த குரலில் வாதம் செய்வது, நீதிபதிகள் குறித்து அவதூறு பரப்புவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் வழக்கறிஞர்களை, வக்கீல் தொழிலில் இருந்து இடைநீக்கம் செய்யவும், குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் ஆஜராக தடைவிதிக்கவும் உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த சட்டத் திருத்தத்துக்கு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தை முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்த நிலையில், வழக்கறிஞர்களின் புதிய சட்டத்திருத்தத்தை நிறுத்தி வைக்கக் கோரி காசி ராமலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு, வழக்கறிஞர்கள் புதிய சட்டத்திருத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.
இதனிடையே, இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க பொதுச் செயலாளர் அறிவழகன், “126 வழக்கறிஞர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்றும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாளை நடைபெறும் பொதுக்குழுவில் பேசி முடிவு எடுக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.