குஷ்புவுக்காக ஆர்.கே.நகரை திமுக விட்டுக் கொடுக்க திமுக முன்வந்ததாம். ஆனால் தொகுதியை மாற்றுவதாக இருந்தால் அரவக்குறிச்சியைத் தரட்டும். அதில் ஜோதிமணி நிற்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறி விட்டாராம். ஆனால் அரவக்குறிச்சியை தர முடியாது என்று திமுக கூறி விட்டதாம். திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதி ஒதுக்கீட்டுக்குப் பிறகு அரவக்குறிச்சி தொகுதி தொடர்பாக காங்கிரஸில் பெரும் முனுமுனுப்பு எழுந்தது. இந்தத் தொகுதியைக் குறி வைத்து ஜோதிமணி பல காரியங்களை செய்து வைத்திருந்தார். ஊர் ஊராகப் போய் மக்களைச் சந்தித்து வாக்குகளையும், ஆதரவையும் திரட்டி வைத்திருந்தார்.
ஆனால் தொகுதியை திமுக ஒதுக்காததால் ஜோதிமணி அதிர்ச்சி அடைந்தார். ராகுல் காந்தியிடம் இதைக் கொண்டு சென்றார். ராகுல் காந்தியும் ஜோதிமணிக்காக திமுகவிடம் பேசுமாறு தமிழக காங்கிரஸைக் கேட்டுக் கொண்டார். ஆனால் திமுக தரப்பு அரவக்குறிச்சியை மறந்து விடுங்கள் என்று கூறி விட்டதாம். இந்த நிலையில்தான் ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவுக்கு எதிராக வலுவான வேட்பாளரை நிறுத்துவது குறித்து யோசித்த திமுக, குஷ்புவை அங்கு போட்டியிட வைக்கலாம் என்றும், தொகுதியை விட்டுத் தர தாங்கள் தயார் என்றும் காங்கிரஸ் கட்சியிடம் கூறியுள்ளது. இதுகுறித்து இளங்கோவனும், ராகுல் காந்தியிடம் பேசியுள்ளார். இதைக் கேட்ட ராகுல் காந்தி, தொகுதியை மாற்றித் தர திமுக தயார் என்றால் அரவக்குறிச்சியை கேளுங்கள், ஜோதிமணி போட்டியிட வேண்டும் என்று கூறி விட்டாராம் ராகுல் காந்தி. குஷ்பு குறித்து அவர் பேசவே இல்லையாம். இதுகுறித்து திமுக தரப்புடன் காங்கிரஸ் தலைவர்கள் பேசியுள்ளனர். குஷ்புவை ஆர்.கே.நகரில் நிறுத்த வசதியாக அத்தொகுதியைத் தர திமுக தரப்புக்கு ஆட்சேபனை இல்லையாம். அதேசமயம், ஜோதிமணிக்காக அரவக்குறிச்சியைத் தர இயலாது என்று கூறிவிட்டார்களாம். அரவக்குறிச்சியை மறந்து விடுங்கள் என்ற அளவில் திமுகவிடமிருந்து பதில் வந்ததாம். இதனால் கடைசி நிமிடம் வரை ஆர்வமாக இருந்த குஷ்பு ஏமாந்து விட்டாராம்.


No comments:
Post a Comment