உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுகளின்படி தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படுகிறதா? என்பதை முழுமையாக ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய மாற்றுத்திறனாளி ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் பணி நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 1107 பின்னடைவு காலி இடங்களை முதலில் நிரப்ப வலியுறுத்தி, உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் பொது நலன் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
இவ்வழக்கு திங்களன்று (நவ. 3) விசாரணைக்கு வந்தபோது, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம். சத்தியநாராயணா அடங்கிய உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது.1995 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் சம வாய்ப்பு சட்டப்படி, அரசு துறைகளில் உள்ள மொத்த பணியாளர் எண்ணிக்கை அடிப்படையில் 3 சதவீத இடங்களை உறுதி செய்ய வேண்டுமென்றும், 3 மாதங்களுக்குள் பின்னடைவு காலி பணியிடங்களை கண்டறிந்து நிரப்ப வேண்டுமென்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2013 அக்.8 ஆம் தேதி உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் அடிப்படையில், மாற்றுத்திறனாளிகளுக்குரிய பின்னடைவு காலி இடங்களை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டது. இதனையடுத்து, பெயரளவிற்கு ஒரு சில துறைகளை மட்டும் குறிப்பிட்டு, அத்துறைகளில் இருக்கும் மாற்றுத்திறனாளி பின்னடைவு காலி இடங்களை சுட்டிக்காட்டி, மாற்றுத்திறனாளி நலத்துறை அரசாணை எண் 10ஐ மார்ச் மாதம் வெளியிட்டது.
ஆசிரியர் பணி நியமனத்தில் 1107 மாற்றுத்திறனாளி பின்னடைவு காலி இடங்கள் உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது என்றும், அந்த இடங்களை நிரப்ப வேண்டும் என்றும் அந்த அரசாணையில் உத்தரவிடப்பட்டது.ஆனால், உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற உத்தரவுகளின் படியும், அரசாணைப் படியும் 1107 மாற்றுத்திறனாளி பின்னடைவு காலி இடங்களை நிரப்பாமல், ஆசிரியர் தேர்வு வாரியம் சுமார் 9000 ஆசிரியர் பணி இடங்களை சமீபத்தில் நிரப்பியது. இதனை எதிர்த்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநலன் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது.
அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
இவ்வழக்கில் தமிழக அரசின் தலைமை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் மாற்றுத்திறனாளி நல மாநில ஆணையர் என அனைவரின் சார்பில் மாற்றுத்திறனாளி துறை செயலாளர் பி.சிவசங்கரன் ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்திருந்தார். தலைமை நீதிபதி எஸ். கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணா முன்னிலையில் இவ்வழக்கு திங்களன்று (நவ. 3) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாற்றுத்திறனாளி துறை செயலாளருடைய பதில் மனு முன்னுக்குப்பின் முரணாக உள்ளது என கூறி, அதில் திருப்தி அடையாத நீதிபதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு தமிழகத்தில் முறையாக அமலாகிறதா என்பதை முழுமையாக ஆராய்ந்து 19.01.2015-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாற்றுத்திறனாளி நல மாநில ஆணையருக்கு உத்தரவிட்டனர்.
இவ்வழக்கில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர் கே.சி. காரல் மார்க்ஸ் ஆஜராகி வாதாடினார்.


No comments:
Post a Comment