மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி, ஜனாதிபதி ஆவார் என்று ஜோதிடர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிறுவயதில் இருந்தே ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் தீவிரமாக இருந்த ஸ்மிருதி ராணி, 12ம் வகுப்பில் படிப்பை பாதியில் நிறுத்திக்கொண்டு, பின்னர் விளம்பர மொடல், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
2003ம் ஆண்டில் பாஜகவில் இணைந்த இவர், 2014ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டபோது, தோல்வியடைந்தார்.
ஆனால், தேர்தலுக்கு முன்பாக இவர், ராஜஸ்தான் மாநிலம், பில்வாராவில் உள்ள கரோய் என்ற கிராமத்திற்கு சென்று அங்கு பண்டிட் நாதலால் வியாஸ் என்ற ஜோதிடரை சந்தித்து வெற்றி வாய்ப்பு குறித்து ஜாதகம் பார்த்துள்ளார்.
அந்த ஜோதிடர், மிக பிரபலமான பதவி உங்களுக்கு காத்திருக்கிறது என்று கூறியுள்ளார். ஆனால், அமேதி தொகுதியில் ராகுல்காந்தியிடம் தோல்வி அடைந்ததால், ஜோதிடர் கணிப்பு பொய்யானது என்று கருதிய நேரத்தில், ஸ்மிருதி ராணிக்கு மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பதவியை கிடைத்தது.
இந்நிலையில் தான், தன்னுடைய வருங்காலம் எப்படி இருக்கும் என்று அறிய ஜோதிடர் பண்டிட் நாதுலால் வியாசை திங்கள்கிழமை அவர் மீண்டும் சந்தித்தார். அவரது ஜாதகத்தை 4 மணி நேரம் கணித்த ஜோதிடர், ஸ்மிருதி ராணி இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆவார் என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவில் மூத்த தலைவர்கள் பலர் இருக்க ஸ்மிருதி ராணி எப்படி குடியரசுத் தலைவராக முடியும் என்ற வாதம் ஒருபுறம் இருக்க, ஒரு மத்திய அமைச்சர் 4 மணி நேரம் ஒரு ஜோதிடர் வீட்டில் அமர்ந்து அருள்வாக்கு கேட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து ஸ்மிருதியிடம் தொலைக்காட்சி செய்தியாளர்கள் சிலர் கேட்டபோது, இன்று உங்களுக்கு நல்ல டிஆர்பி கிடைக்கும் என நம்புகிறேன். உங்களுக்கு உதவியதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று சிரித்தபடி கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தனிப்பட்ட எனது வாழ்க்கை குறித்து ஊடகங்கள் கவலைப்படத் தேவையில்லை. அதேசமயம், உங்களது தலைப்புச் செய்திகளில் தொடர்ந்து என்னை வைத்திருக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment