ஐபிஎல் போட்டிகளை வெளிநாட்டில் நடத்துவதால் ஐபிஎல் நிர்வாகத்துக்கு மட்டுமின்றி மாநில அரசுகளுக்கும் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 40&50 சதவீதம் போட்டிகளை வெளிநாட்டில் நடத்தினால், டிக்கெட் வருவாய், ஸ்பான்சர்ஷிப் என பல்வேறு வகையில் 50 சதவீதம் அளவிலான வருவாய் இழப்பு ஏற்படும்.
கடந்த ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணி தனது சொந்த ஊரில் 6 போட்டிகளில் விளையாடியது. இதன் மூலம் அம்மாநில அரசுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வரியாக ரூ.96 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்தாண்டு ஒவ்வொரு அணியும் சொந்த ஊரில் 7 போட்டிகளில் விளையாடுகின்றன. இதில் பாதிக்கும் மேற்பட்ட போட்டிகளை வெளிநாட்டில் நடத்தினால், ஒவ்வொரு மாநில அரசுக்கும் தலா ரூ.50 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.
பிசிசிஐ அறிவிப்பு
மக்களவை தேர்தல் நடக்க இருப்பதால், ஐபிஎல் டி&20 7 வது சீசன் போட்டிகள் ஐக்கிய அரசு எமிரேட்சில் ஏப்ரல் 16ம் தேதி தொடங்கும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஐபிஎல் டி&20 7வது சீசன் போட்டிகள் ஏப்ரல் 16ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடத்த பிசிசிஐ முடிவு செய்திருந்தது. இதற்கிடையே, மக்களவை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, தேர்தல் ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி மே 12ம் தேதி வரை 9 கட்டமாக நடக்க உள்ளது. தேர்தல் நடப்பதால், ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என உள்துறை அமைச்சகம் அறிவித்தது. போட்டிகளை வெளிநாட்டில் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்திய பிசிசிஐ, 70 சதவீதம் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதென திட்டமிட்டது.
இந்நிலையில், எந்த நாட்டில் போட்டிகளை நடத்துவது என்பது குறித்து முடிவு செய்வதற்கான பிசிசிஐ ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், முதற்கட்ட போட்டிகளை ஐக்கிய அரசு எமிரேட்சிலும், 2ம் கட்ட போட்டிகளை வங்கதேசம் அல்லது இந்தியாவிலும், கடைசி கட்ட போட்டிகளை இந்தியாவிலும் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஐபிஎல் தலைவர் ரஞ்சிப் பிஸ்வால் கூறுகையில், ஐபிஎல் 7வது சீசனை ஐக்கிய அரபு எமிரேட்சில் ஏப்ரல் 16ம் தேதி தொடங்கப்படும். முதற்கட்டமாக அங்கு ஏப்ரல் 16 முதல் 30ம் தேதி வரையிலான போட்டிகள் நடக்கும். அடுத்ததாக மே 1 முதல் 12ம் தேதி வரையிலான போட்டிகள் வங்கதேசம் அல்லது இந்தியாவில் நடத்தப்படும். கடைசி கட்டமாக ப்ளே ஆப், இறுதி சுற்று போன்ற முக்கியமான போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படும். மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளிக்கும் பட்சத்தில் 2ம் கட்ட போட்டிகளையும் இந்தியாவில் நடத்த முடிவு செய்துள்ளோம் என கூறியுள்ளார்.
7ம் கட்ட வாக்குபதிவு முடிந்ததும், மே முதல் வாரத்தில் இருந்தே இந்தியாவில் போட்டிகளை நடத்த ஐபிஎல் நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனாலும், இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் எந்த பதிலும் அளிக்கவில்லை. அனுமதி கிடைக்காத பட்சத்தில் மட்டுமே 2ம் கட்ட போட்டிகள் (மே 1&12) வங்கதேசத்தில் நடக்கும். வாக்கு எண்ணிக்கை நாளான மே 16ம் தேதி எந்த போட்டிகளும் நடத்தப்படாது. இதற்கான விரிவான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.
கடந்த ஐபிஎல் போட்டியின் போது, சூதாட்ட சர்ச்சை பூதாகரமாக எழுந்தது.இந்நிலையில், பிசிசிஐயின் துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா நேற்று கூறுகையில், இம்முறை ஐபிஎல்லில் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு துறையினர் அனைத்து போட்டிகளையும் தீவிரமாக கண்காணிக்க உள்ளனர். சூதாட்ட புகாரில் எந்த வீரராவது சிக்கி, குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் மீது வாழ்நாள் தடை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.


No comments:
Post a Comment