Latest News

தமிழகத்தில் ததிங்கினத்தோம் போடும் பாஜக கூட்டணி – உச்சகட்ட குழப்பம்!


தமிழக பாஜக கூட்டணியில் உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. பாஜக கூட்டணிக் கட்சிகளுடன் முழுமையான தொகுதி உடன்பாடு ஏற்படாமலும், வேட்பாளர்களை அறிவிக்காமலும் உள்ள நிலையில் விஜயகாந்த் இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளார் என்று செய்தி வெளியாகியுள்ளது.

பாஜக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒதுக்கிய தொகுதிகளை பாமக கேட்டு பிடிவாதம் செய்து வருவதால் உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் எல்லா கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். அதிமுகவில் 40 தொகுதிக்கும் வேட்பாளர் அறிவித்து, ஜெயலலிதா பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பாஜக அணியில் தேமுதிக, பாமக, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஐஜேகே, புதிய நீதி கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஆனால், இந்த கட்சிகளுக்கு சுமுகமாக தொகுதி பங்கீடு செய்ய முடியாமல் பாஜக திணறி வருகிறது. குறிப்பாக, தேமுதிக, பாமக தலைவர்களிடம் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் முடியவில்லை. கடைசியில், தேமுதிகவுக்கு திருவள்ளூர், வடசென்னை, வேலூர், ஆரணி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், திருப்பூர், கரூர், திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், மதுரை, நெல்லை ஆகிய 14 தொகுதிகள் ஒதுக்க முடிவெடுக்கப்பட்டது.

ஆனால், இதில் சில தொகுதிகளை பாமக பிடிவாதமாக கேட்டது. அதனால் பாஜக கேட்டுக் கொண்டதன்படி, தேமுதிகவினர் புதிய பட்டியலை கொடுத்தனர். பாமகவும் புதிய பட்டியலை பாஜவினரிடம் அளித்தது. இரண்டு கட்சிகளும் அளித்த பட்டியல்களில் சில தொகுதிகளை விட்டு கொடுக்கும்படி பாஜவினர் கோரிக்கை விடுத்தனர். 2 கட்சிகளும் அதை ஏற்க மறுத்து பிடிவாதமாக இருந்தன.

சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆரணி தொகுதிகளை விட்டு கொடுக்க தேமுதிக மறுக்கிறது. ஆரணி, விழுப்புரம், கிருஷ்ணகிரி தொகுதிகளை கேட்டு பாமக பிடிவாதம் பிடிக்கிறது. பாமகவுக்கு இவற்றுக்கு பதிலாக திண்டுக்கல், நாமக்கல், நாகப்பட்டினம் தொகுதிகளை தருவதாக பாஜக தெரிவித்தது. இதை பாமக ஏற்றுக் கொள்ளவில்லை.

இதையடுத்து, பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று முழுவதும் பாமகவினரை சமாதானபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். தொகுதிகளை இறுதி செய்து நேற்றிரவு டெல்லி புறப்பட்டு செல்ல அவர் திட்டமிட்டிருந்தார். டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பட்டியலை கொடுத்து, இன்று காலை 11 மணிக்கு தொகுதிகள் பட்டியலை வெளியிடுவதாக இருந்தனர். ஆனால், கடைசி வரை தேமுதிக, பாமகவை சமரசம் செய்ய முடியாமல், நேற்றிரவு பயணத்தை பொன்.ராதாகிருஷ்ணன் ரத்து செய்தார். இதன்பின், இன்று காலை 6.40 மணி விமானத்தில் டிக்கெட் போட்டிருந்தார். அதையும் ரத்து செய்து விட்டார்.

இதைத் தொடர்ந்து, தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதர ராவ் இன்று சென்னை வந்துள்ளார். அவரும், பொன்.ராதாகிருஷ்ணனும் இன்று மீண்டும் பாமகவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர். இன்று மாலைக்குள் சிக்கலை தீர்த்து விட வேண்டுமென அவர்கள் முயற்சிக்கின்றனர். ஆனால், பாமகவினர் சில தொகுதிகளை பெறுவதில் பிடிவாதமாக உள்ளதால், தொகுதி பங்கீடு சிக்கல் இன்னும் 2 நாள் நீடிக்கலாம் போல் தெரிகிறது.

கூட்டணியில் தேமுதிகவுக்கு பாஜவினர் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இதனால், பாமக இறங்கி வராவிட்டால் கூட்டணியிலிருந்து பாமகவை ஒதுக்கிவிட பாஜக தலைவர்கள் இறுதி முடிவெடுக்கலாம் என கூறப்படுகிறது.

இதற்கிடையே, வேட்பாளரை அறிவிக்காமலேயே விஜயகாந்த் இன்று மாலை 3 மணிக்கு திருவள்ளூர்(தனி) தொகுதிக்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டியிலிருந்து தனது முதல் கட்ட பிரச்சாரத்தை தொடங்குகிறார். மாலை 5 மணியளவில் வட சென்னை தொகுதிக்கு உட்பட்ட கொளத்தூரிலும், இரவு 7 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்ட பல்லாவரத்திலும் பிரச்சாரம் செய்யவிருக்கிறார்.

திருவள்ளூர், வடசென்னை தொகுதிகள் தேமுதிகவுக்கே ஒதுக்கப்படும் என தெரிகிறது. பாஜக கூட்டணியில் தேமுதிக 14 தொகுதி, பாஜ 8, பாமக 8, மதிமுக 6 மற்றும் ஐஜேகே, கொங்கு மக்கள் தேசிய கட்சி, புதிய நீதிக்கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.