Latest News

  

தமிழர்களின் உரிமைக்காகப் போராடுவோம்': ஜி.கே.வாசன்



சென்னை, டிச.17: முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைக்காகத் தொடர்ந்து போராடுவோம் என்று மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.


சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா, முல்லைப் பெரியாறு அணை விவகாரம் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரம் தொடர்பான விளக்கக் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பி.எஸ்.ஞானதேசிகன் தலைமை தாங்கினார்.


கூட்டத்தில் ஜி.கே.வாசன் பேசியது:


மத்திய மாநில அரசுகளின் ஒருமித்த கருத்தோடுதான் கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டம் தொடங்கப்பட்டு பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மிகவும் நவீன ரீதியான பாதுகாப்புடன் கூடியது இந்தத் திட்டம். இத் திட்டம் நிறைவேறினால் தமிழகத்தில் ஒரு போதும் மின்பற்றாக்குறை ஏற்படாது.


தேர்ந்த விஞ்ஞானிகள் அணுமின் நிலையத்தால் ஆபத்து எதுவும் இல்லை என்று கூறி வருகின்றனர். இதனை அங்குள்ள மக்கள் நம்ப வேண்டும். திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.


முல்லைப் பெரியாறு பிரச்னை தமிழர்களின் வாழ்வாதாரப் பிரச்னை. கேரளத்தில் யார் ஆட்சி நடைபெறுகிறது என்பது முக்கியமில்லை. தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயத்துக்காக காங்கிரஸ் போராடும் என்றார் ஜி.கே.வாசன்.


முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே கேட்டுக் கொள்ளாத கேரள அரசு, மத்திய அரசின் பேச்சைக் கேட்டுக் கொள்ளும் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. எனவே கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்பதுதான் என் கருத்து. ஒரு அரசை டிஸ்மிஸ் செய்வது நமக்கு ஒன்றும் புதிது இல்லை. கேரளத்துக்கும் அது புதிதல்ல என்றார் அவர்.


தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு: கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது என்பதற்காக ஜனநாயகத்துக்கு எதிரான அவர்களின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழர்களின் உரிமைக்காக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும் என்றார் அவர்.


தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி: கேரளத்தில் அரசியல் கட்சிகள் நடந்துகொள்ளும் முறை சரியானதல்ல. உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் கேட்காமல் அவர்கள் இப்படியே நடந்து கொண்டால் இடுக்கி மாவட்டத்தை தமிழகத்தோடு சேர்க்க வேண்டும் என்று கேட்போம் என்றார் அவர்.


கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலர் சாகர் ராய்கா, கே.ஜெயகுமார், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்.எஸ்.வி.சித்தன்,


எஸ்.எஸ்.ராமசுப்பு, ஜே.எம்.ஆரூண், சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், காங்கிரஸ் நிர்வாகி சிரஞ்சீவி உள்பட பலர் பங்கேற்றனர்
என்றும் சமுதாய பணியில்
N . K . M . நூர் முஹம்மத் (நூவன்னா )

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.