Latest News

அம்மாவுக்காக நான், அம்மாவால் நான் என வாழ்ந்தவர் சசிகலா.. புலிப்படை கருணாஸ் பேச்சு!

 
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கண்ணாடியாக வாழ்ந்த சசிகலா விரைவில் அதிமுக தலைமையை ஏற்க வேண்டும் என முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும், எம்.எல்.ஏவுமான நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார். முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பின் தலைவரான கருணாஸ், கடந்த தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில் நின்று வெற்றிப் பெற்றவர். சட்டசபையில் தனது பேச்சுத் திறமை காரணமாக முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு உள்ளானவர்.

இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோவில் சிகிச்சைப் பெற்று வந்த ஜெயலலிதா காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அதன் தொடர்ச்சியாக, ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக்க வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் வலுபெற்று வருகிறது. இந்தச் சூழ்நிலையில், முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும், எம்.எல்.ஏவுமான நடிகர் கருணாஸ் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, "அம்மாவால் நான், அம்மாவிற்காகவே நான் என்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற சசிகலா விரைவில் அதிமுக தலைமையை ஏற்க வேண்டும். தவவாழ்வு வாழ்ந்து மறைந்த தவப்புதல்வியின் தவச்சகோதரி சசிகலா விரைவில் அதிமுகவின் தலைமை பொறுப்பேற்று அதிமுகவையும் அதன் தொண்டர்களையும்,தமிழக மக்களையும் காக்க வேண்டும். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதாவின் கண்ணாடி போன்று வாழ்ந்தவர் சசிகலா. எனவே, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்குப் பிறகு அதிமுக எனும் பேரியக்கத்தை வழி நடத்தி கொண்டு செல்லும் ஆற்றல் மிக்கவர் சசிகலா தான்" என்றார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.