Latest News

ஒன்றரை மணி நேரம் நடுவழியில் நின்ற சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ்.. கூரையை உடைந்து நுழைந்த கொள்ளையர்கள்


சேலத்தில் இருந்து சென்னைக்கு ரயிலில் கொண்டுவந்த பல கோடி பணம் எப்படி, எங்கு கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சேலத்தில் இருந்து சென்னைக்கு, நேற்று இரவு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான 23 டன் எடை கொண்ட பழைய ரூபாய் நோட்டுகள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்காக தனியாக ஒரு பெட்டி ரிசர்வ் செய்யப்பட்டிருந்தது. இப்படி பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த மொத்த பணத்தின் மதிப்பு ரூ.342 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. வங்கிகளில், பழைய ரூபாய் நோட்டுகளை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டு புது ரூபாய் நோட்டுகளை வழங்குவது வழக்கம்.

இப்படி, சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள வங்கிகளில் சேகரிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள்தான் ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இன்று எழும்பூர் ரயில் நிலையம் வந்த ரயிலில் இருந்து பணத்தை வெளியே எடுக்க ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சென்றிருந்தனர். ஆனால், பணம் இருந்த ரயில் பெட்டியின் மேற்கூரை ஓட்டையிடப்பட்டு, உள்ளேயிருந்த பல பணப் பெட்டிகள் உடைக்கப்பட்டு திருடப்பட்டருந்தது தெரியவந்தது. கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் மதிப்பு கணக்கிடப்பட்டு வருகிறது. ஓடும் ரயிலில் எப்படி மேற்கூரை துளையிட்டிருக்க முடியும், எங்கு வைத்து இந்த கொள்ளை நடந்திருக்க முடியும் என்பது குறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது அவர்கள் கூறியது: சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயில் இரவில் முக்கிய ரயில் நிலையங்களில் வழக்கம்போல நின்று வந்துள்ளது. ஆனால் விருதாசலம் ரயில் நிலையத்தில்தான் ரயில் சுமார் 1.30 மணி நேரம் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு வைத்து ரயிலின் இன்ஜின் மாற்றப்பட்டுள்ளது. இந்த கால இடைவெளிதான் கொள்ளையடிக்க வசதியான நேரமாக இருந்திருக்க முடியும்.

வெல்டிங் மிஷினை பயன்படுத்தி ரயில் மேற் கூரை ஓட்டை போடப்பட்டுள்ளது. அந்த ஓட்டை ஒரு ஆள் நுழையும் அளவுக்கே போடப்பட்டுள்ளது. கை தேர்ந்த நபர்களால் இக்கொள்ளை நடந்துள்ளது. இவ்வாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ரயில் இன்ஜின் மாற்றப்படும் நேரத்தில் வெளியான வெல்டிங் மிஷின் சத்தத்தை யாரும் ரயில் நிலைய பயணிகளோ, அதிகாரிகளோ சந்தேகிக்கவில்லை என்பதால் கொள்ளையர்கள் அப்போது கைவரிசை காட்டியிருக்கலாம் என தெரிகிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.