பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இனத் துரோகி என்றால், திமுக தலைவர் கருணாநிதி தமிழினத் துரோகி என்று கூறியுள்ளார் அமைச்சர் கோகுல இந்திரா. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வெற்றி விழா மற்றும் அ.தி.மு.க. அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில், தமிழக கைத்தறி துறை அமைச்சர் கோகுல இந்திரா கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். அவரது பேச்சிலிருந்து...
கூட்டணியால் வெல்லவில்லை கடந்த சட்டசபைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளால் அதிமுக வெற்றி பெறவில்லை. அதிமுகவை வைத்தே, எதிர்கட்சியினரான விஜயகாந்த்தும், கிருஷ்ணசாமியும், கம்யூனிஸ்ட்களும் வெற்றி பெற்றார்கள். அவர்களின் நடவடிக்கைகள் சரியில்லாததால், உள்ளாட்சி தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக தனித்து போட்டியிட்டு, அதிக இடங்களை கைப்பற்றி, வரலாற்று சாதனை படைத்தது.
இனத்துரோகி ராமதாஸ் ராமதாஸ் ஒரு இனத்துரோகி. காவிரி தண்ணீர் பிரச்னையில் தமிழக அரசை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். கருணாநிதி தமிழின துரோகி. முதல்வர் ஜெயலலிதா, தமிழக மக்களுக்கு எந்த நல்ல திட்டங்களை கொண்டு வந்தாலும் அதை விமர்சிக்கவில்லை என்றால், அவரால் இருக்க முடியாது.
எப்பப் பார்த்தாலும் தமிழிசைக்கு இதே பேச்சு தமிழகத்திலே எந்த திட்டம் வந்தாலும் மத்திய அரசு திட்டம், மத்திய அரசு நிதி என்று தமிழிசை சொல்கிறார். அந்த மத்திய அரசுக்கு மாநில அரசின் கஜானாவில் இருந்துதான் நிதி போகிறது.
அங்கீகாரம் கிடைத்தவர் அரசியல் செய்கிறார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு அங்கீகாரம் கொடுத்ததே அதிமுகதான். ஈழப் பிரச்னையை வைத்து அரசியல் செய்து வந்த அவர், இப்போது முல்லை பெரியாரை வைத்து அரசியல் பண்ணுகிறார்.
இளங்கோவன் செய்தார் நடிகை குஷ்புவை வைத்து அரசியல் பண்ணும் இளங்கோவன், முன்பு மத்திய இணை அமைச்சராக இருந்தபோது என்ன நலத் திட்டங்களை கொண்டு வந்தார் என்று சொல்லமுடியுமா?
நீங்க ஓய்வு எடுக்காதது ஏன் முதல்வர் ஓய்வெடுக்க வேண்டும் என கூறும் கருணாநிதி, ஏன் இன்னும் ஓய்வு பெறவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இதுவரை கருணாநிதி வீல்சேரில் வருவதை விமர்சிக்க யாரையும் நம் முதல்வர் அம்மா அவர்கள் அனுமதித்தது இல்லை. ஆனால், இன்று முதல்வருக்கு உடல் நிலை சரியில்லை என்றால் கருணாநிதி விமர்சிக்கிறார் என்றார் கோகுல இந்திரா.
No comments:
Post a Comment