வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொண்ட பெண்களுக்கும் 6 மாத காலம் பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என்று டெல்லி ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பிள்ளையுடன், தாய்க்கு நெருங்கிய பந்தம் ஏற்பட அந்த விடுமுறை அவசியம் என்றும் கோர்ட் வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசு துறையொன்றில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர் வாடகை தாய் மூலம், இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தார். இதற்காக பேறுகால விடுமுறைக்கு அவர் விண்ணப்பித்தபோது, அரசு அதை மறுத்துவிட்டது. உங்களது வயிற்றில் கருவுறாத குழந்தைக்காக ஆறு மாத காலம் விடுமுறை வழங்க முடியாது" என்று அரசு கூறிவிட்டது.
இதை எதிர்த்து அந்த பெண் டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார். விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி ராஜிவ் சக்தார் நேற்று அளித்த தீர்ப்பு: விதி எண் 43, துணை விதி (1)-ன்கீழ், தாய் என்ற அங்கீகாரம் பெற்ற பெண்மணி பேறுகாலத்திற்கு விடுப்பு எடுக்க முடியும். வாடகை தாய் மூலம் பிள்ளை வாங்கி வளர்க்கும் பெண்மணி என்றாலும்கூட, அந்த தாயும், தனது குழந்தையுடன் நேரம் செலவிட விரும்புவார். அப்போதுதான் குழந்தை-தாய் நடுவே பந்தம் அதிகரிக்கும். எனவே தாய்ப்பால் ஊட்டும் தாய்க்கு கொடுத்தும் அதே உரிமை, வாடகை தாய் மூலமாக குழந்தை பெறும் பெண்ணுக்கும் உண்டு. குழந்தைக்கு புட்டிப்பால் ஊட்டுவதற்கு எதற்கு தாய்க்கு விடுப்பு தர வேண்டும் என்ற வாதமும், வளர்ப்பு தாய்க்கு, உடல் ரீதியாக எந்த மாற்றமோ, உபாதைகளோ கிடையாது, பிறகு ஏன் விடுப்பு தர வேண்டும் என்ற வாதமும் நியாயம் கிடையாது. குழந்தைக்கு எந்த வழியில் பால் ஊட்டப்படுகிறது என்பது இதில் முக்கியமில்லை. உடல் வலியும் கருத்தில் எடுக்கப்படவில்லை. ஆனால், பெற்ற தாய் போலவே, வளர்ப்பு தாயும், தனது குழந்தை மீது பாசம் வைத்திருப்பதை மறுக்க முடியாது. அவளும் தனது குழந்தையுடன் நேரத்தை செலவிட்டு வளர்க்க விரும்புவாள். அதற்கு மதிப்பு தர வேண்டும். எனவே, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பெண்களுக்கும் விடுமுறை கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment