
வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால், எனக்கு வழங்கப்பட்ட கேல்ரத்னா விருதை திருப்பி அளிப்பேன் என்று குத்துச்சண்டை வீரர் விஜேயேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி சலோ என்ற பெயரில் விவசாயிகள், 11-வது நாளாக நடத்தும் போராட்டத்தால், டெல்லி எல்லைப்பகுதியில் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதுவரை விவசாயிகள், மத்திய அரசுக்கு இடையே 5 சுற்றுப் பேச்சு முடிந்தபோதிலும், எந்தவிதமான சுமூகமான தீர்வும் எட்டப்படவில்லை.
இந்நிலையில் டெல்லி சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் போராட்டத்தில் குத்துச்சண்டை வீரர் விஜேயந்தர் சிங் இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
எங்களுடைய மூத்த சகோதரரான பஞ்சாப் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் ஹரியானாவைச் சேர்ந்த இங்கு வந்துள்ளேன். பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளபோது, ஹரியானாவைச் சேர்ந்த நான் வர வேண்டும்தானே.
மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறாவிட்டால், விளையாட்டுத் துறையில் உயர்ந்த விருதான எனக்கு வழங்கப்பட்ட ராஜீவ் கேல்ரத்னா விருதை மத்திய அரசிடம் நான் திருப்பி அளிப்பேன். விவசாயிகள் ஒற்றுமை எப்போதும் இருக்க வேண்டும், எதிர்காலத்திலும் இருக்க வேண்டும்.
இவ்வாறு விஜயேந்தர் சிங் தெரிவித்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் விஜயேந்தர் சிங் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தேசிய குத்துச்சண்டை பயிற்சியாளர் குருபக்ஸ் சிங் சாந்து தனக்கு வழங்கப்பட்ட துரோனாச்சாரியார் விருதை திருப்பி வழங்கப்போவதாகவும் அறிவித்துள்ளார். இது தவிர ஏற்கெனவே பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிராகாஷ் சிங் பாதல் தனக்கு வழங்கப்பட்ட பத்மவிபூஷன் விருதையும், சிரோன்மணி அகாலி தளம் மூத்த தலைவர் சுக்தேவ் சிங் தனக்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதையும் அரசிடம் திருப்பி வழங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment